'ஹார்வர்ட் தமிழ் இருக்கை... அம்மாவின் கனவை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி!'
சான் பிரான்சிஸ்கோ: ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைய வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுகளில் ஒன்று. அதை நிறைவேற்ற உதவிய தமிழக அரசுக்கு நன்றி என அதிமுகவின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் அபு கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அமெரிக்கா வாழ் தமிழர்களின் நீண்ட நாள் கனவான 'ஹார்வார்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை' அமைய, உதவி புரிந்த தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களுக்கும், துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களுக்கும், அமெரிக்காவின் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களின் சார்பாக இதயங்கனிந்த நன்றிகளை தெரியப்படுதிக் கொள்கிறோம்.

அம்மா அவர்கள் 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் ஹார்வர்டு தமிழ் இருக்கை பற்றி கனிவோடு குறிப்பிட்டதை போல, அவரது கனவை நினைவாக்கிட, தமிழக அரசின் சார்பில் நிதியுதவி செய்து கொடுத்ததை அமெரிக்கா வாழ் தமிழர்கள் என்றென்றும் நன்றியோடு நினைவில் கொள்வார்கள்.
2015 ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற ஃபெட்னா விழாவில், இதற்கான அறிவிப்பு செய்த நாள் முதல் அனைத்து அமெரிக்கா வாழ் தமிழர்களும் ஒன்றுபட்டு, பெருமுயற்சில் தங்களை ஈடுபடுத்தி வந்தனர். அதில் அமெரிக்காவிலுள்ள அண்ணா திராவிட முன்னேற்ற கழக நண்பர்களின் முயற்சியும் பெரும் வலு சேர்ப்பதாக அமைந்தது.
இது தொடர்பாக தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் அவர்களிடம் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதன் அவசியம் பற்றி, கழகத்தின் சார்பில் பலமுறை தொடர்ந்து பேசி இருக்கின்றோம், ஆலோசித்துள்ளோம். அமைச்சர் அவர்களின் பேராதரவும், நல் ஆலோசனையும் நல்லதொரு வழிகாட்டுதலாக அமைந்தது.
முத்தாய்ப்பாக, தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்துறை மூலமாக, அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் அவர்களே தமிழக அரசின் சார்பாக ஒப்புதல் அளித்தது இரட்டிப்பு மகிழ்ச்சி ஆகும்.
அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கூறியுள்ளது போல், மீதம் தேவைப்படும் தொகைக்கும், தமிழக அரசு சார்பில் உரிய முயற்சிகள் மேற்கொண்டு, ஹார்வர்ட் தமிழ் இருக்கை நிறைவேறிட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.
ஹார்வர்ட் தமிழ் இருக்கை, தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் பங்கேற்று சிறப்பிக்கும் நாளை கழகத் தொண்டர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அபு கான்,
ஒருங்கிணைப்பாளர், அனைத்திந்திய அண்ணா திமுக, அமெரிக்கா












Click it and Unblock the Notifications