ரஷ்யாவை விட 100 அணு குண்டுகள் அதிகம் வைத்துள்ள அமெரிக்கா.. உறுமல்.. அணு ஆயுத போர் வெடிக்க வாய்ப்பா?
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இது அணுஆயுத போராக வெடிக்க வாய்ப்புள்ளதா, களநிலவரம் என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
ரஷ்யா-உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடிக்கிறது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதே இந்த பிரச்னைக்கு முதற் காரணம். இதனால் இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
மேலும், நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சிக்கிறது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளதால் ரஷ்யா கோபமடைந்துள்ளது.

எல்லையில் படைகள் குவிப்பு
இதனால் 2021 நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. ஒரு லட்சத்துக்கும் அதிக வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் போர் தொடுக்கும் வகையில் எல்லையில் குவித்துள்ள படைகளை வாபஸ் வாங்கும்படி ரஷ்யாவை வலியுறுத்துகின்றனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
ஆனால் ரஷ்யா செவிசாய்க்கவில்லை. பயிற்சிக்கு தான் படைகளை குவித்துள்ளதாகவும், போர் தொடுக்கும் எண்ணம் இல்லை எனவும் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே உக்ரைனில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனே வெளியேறும்படி அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவுறுத்தினார். மேலும், அவர் ரஷ்யா அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுக்கும் பட்சத்தில், உக்ரைனுக்கு ஆதரவாக பிற நாடுகள் உதவ நேரிடலாம். இதன்மூலம் இது 3வது உலக போராக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அணுஆயுதம் எவ்வளவு
இந்நிலையில் தான் ரஷ்யா-உக்ரைன் இடையேயான பதற்றம் அணுஆயுத போராக மாறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் உலகில் அதிக அணுஆயுதங்களை ரஷ்யா கொண்டுள்ளது. எப்ஏஎஸ் (Federation of American Scientists) புள்ளிவிவரப்படி ரஷ்யாவிடம் 4,497 அணுஆயுதங்கள் உள்ளன. இதில் 1700 அணுஆயுதங்கள் பயன்படுத்தும் வகையிலும், 2797 அணுஆயுதங்கள் மாற்றாகவும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 1760 அணுஆயுதங்கள் செயலிழக்க செய்யப்பட வேண்டியுள்ளது. நாட்டோ படைகளில் குறிப்பாக அமெரிக்காவிடம் 3800 அணுஆயுதங்கள் உள்ளன. இதில் தற்போது வரை 1800 அணுஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன. இது ரஷ்யாவை விட 100 அதிகம். இதுதவிர 1750 அணுஆயுதங்கள் செயலிழக்க செய்யப்பட வேண்டியுள்ளது.

அணுஆயுத போருக்கு வாய்ப்பா
உலகில் உள்ள அணுஆயுதங்களில் இந்த நாடுகளிடம் மட்டும் 90 சதவீதம் உள்ளன. உக்ரைன் நாட்டோவில் இணைந்தால் நாட்டோ படைகள் உதவிக்கு செல்லும். அப்போது ரஷ்யா-நாட்டோ இடையே போர் மூளும் பட்சத்தில் கிரிமியாவை உக்ரைனால் மீட்க முடியும். இந்த வேளையில் அணுஆயுத போர் ஏற்படுமா என்றால் அதற்கான வாய்ப்பு இருக்காது. காரணம் என்னவெனில் இதற்கு முன்பு நடந்த அணுஆயுத தாக்குதல் அதிக உயிர், பொருள் சேதத்தை கொடுத்துள்ளது. மேலும், தொடர்ச்சியான கதிரியக்க பாதிப்பால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கவனத்தில் கொண்டு ரஷ்யா, நாட்டோ படைகள், அமெரிக்கா உள்பட எந்த நாடுகளும் அணுஆயுத போரை முன்னெடுக்க விரும்பாது. மாறாக ரஷ்யா, உக்ரைன் இடையே தாக்குதல் மட்டுமே நடக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி அணுஆயுத தாக்குதல் எப்போது
கடைசியாக 1945ல் நடந்த 2ம் உலக போரில் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கா ஆகஸ்ட் 6ல் ஜப்பான் ஹீரோசிமாவிலும், ஆகஸ்ட் 9ல் நாகசாகியிலும் அணுஆயுதங்களை வீசியது. இதில் அமெரிக்கா கணக்குப்படி ஒரு லட்சத்து 35 ஆயிரம் மக்கள் வசித்த ஹீரோசிமாவில் பாதிபேர் 67 ஆயிரத்து 500 பேர் இறந்ததாகவும், 1 லட்சத்து 95 ஆயிரம் பேர் வசித்த நாகசாகியில் 64 ஆயிரம் பேர் இறந்ததாகவும், 70 சதவீத கட்டடங்கள் சேதமானதாகவும் கணக்கிடப்பட்டது.

புற்றுநோய் பாதிப்பு
ஆனால் மொத்த உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருக்கும். பிற பகுதியில் இருந்து வந்தவர்கள், ராணுவவீரர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், பிற தொழிலாளர்களை சேர்த்தால் 2 நகரிலும் மொத்த பலி 2.50 லட்சத்தை எட்டிருக்கலாம் என இன்னொரு கணிப்பு கூறுகிறது. மேலும் போர் முடிவடைந்தாலும் கதிரியக்க தாக்கத்தால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பதோடு, லுக்கோமியா உள்பட பல்வேறு புற்றுநோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

13,150 அணுஆயுதங்கள்
ஹீரோசிமா, நாகசாகியில் 36 கிலோ டன் கொண்ட 2 அணுஆயுதங்கள் மட்டுமே வீசப்பட்டன. அதாவது ஹீரோசிமாவில் 15 கிலோ டன், நாகசாகியில் 21 கிலோ டன் மட்டுமே வீசப்பட்டதற்கே ஜப்பான் உருக்குலைந்து போனது. ஆனால் தற்போதைய சூழலில் உலக நாடுகளிடம் 100க்கும் அதிக டன் எடையில் அணுஆயுதங்கள் உள்ளன. 9 நாடுகளில் மொத்தம் 13,150 அணுஆயுதங்கள் உள்ளன. இதில் ஏவுகணை, குண்டு வடிவில் 3650 அணுஆயுதங்கள் தயாராக உள்ளன. அணுஆயுத போர் ஏற்பட்டால் இது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் போர் மூண்டாலும் அணுஆயுதங்களை நாடுகள் பயன்படுத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications