"உக்ரைன் போர் டூ உள்நாட்டு பதற்றம்.." தொடர்ந்து சறுக்கும் புதின்.. கையை பிசையும் ரஷ்ய அதிகாரிகள்
மாஸ்கோ: கடந்தாண்டு தொடங்கிய உக்ரைன் போர் இப்போது சுமார் 1.5 ஆண்டுகளுக்குப் பின்னர் மெல்ல அப்படியே ரஷ்யாவின் உள்நாட்டுப் போராக மாறி வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. ரஷ்யாவும் உக்ரைனும் முன்பு சோவியத் ஒன்றியம் இருந்த போது, அதில் இருந்தவை தான். சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரே உக்ரைன் தனியாக உருவானது.
சோவியத் வீழ்ச்சி சமயத்தில் உக்ரைன் நாட்டிடம் அணு ஆயுதங்கள் கூட இருந்தன. ஆனால், சர்வதேச நாடுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தம் காரணமாக உக்ரைன் தனது அணு ஆயுதங்களைத் தானே அழித்தது.

இந்தச் சூழலில் தான் கடந்த சில ஆண்டுகளாகவே உக்ரைன் மெல்ல மேற்குலக நாடுகளிடம் நெருக்கம் காட்டி வந்தது. இது ரஷ்யாவுக்கு கடும் ஆத்திரத்தைக் கொடுத்தது. உக்ரைன் மேற்குலக நாடுகளுடன் நெருங்கினால் அது தனக்கு ஆபத்தாக இருக்கும் என புதின் கருதினார். இதனால் உக்ரைன் தொடர்ந்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2014ஆம் ஆண்டில் யாருமே எதிர்பார்க்காத வகையில் க்ரீமியா தீபகற்பத்தை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டார்.
இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பல ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு மோதல் போக்கே நிலவி வந்தது. இதற்கிடையே கடந்த 2020ஆம் ஆண்டு முதலே உக்ரைன் எல்லையில் புதின் ராணுவத்தைக் குவித்து வந்தார். போர்ப் பயிற்சிக்காக ராணுவத்தை அங்கே இறக்குவதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் முழு வீச்சிலான போரை உக்ரைன் மீது கடந்த பிப். மாதம் ஆரம்பித்தது.
இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்றே தொடக்கத்தில் பலரும் நினைத்தனர். ஆனால், உக்ரைன் போர் ஓராண்டைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதற்கு ரஷ்ய ராணுவத்தின் செயல்பாடு, உலக நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் ஆயுதம் எனப் பல விஷயங்கள் சொல்லப்படுகிறது. போர் இப்படி ஆண்டுக் கணக்கில் செல்வது ரஷ்யாவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் தான் இப்போது நிலைமை மெல்ல மாற ஆரம்பித்துள்ளது. அதாவது ரஷ்யாவில் செயல்படும் வலுவான தனியார் ராணுவமாகக் கருதப்படும் வாக்னர் குழு ரஷ்யா ராணுவத்திற்கு எதிராகத் திரும்பியுள்ளது. தங்கள் மீது ரஷ்யா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இதற்குப் பதிலடி தருவோம் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் அங்கே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
கடந்த 2014 முதல் உக்ரைன் எல்லையில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்திக் கொண்டன என வாக்னர் அமைப்பின் தலைவர் பிரிகோஜின், கடன்தா 2022 பிப். மாதம் அங்கு அசாதாரணமானதாக எதுவும் நடக்கவில்லை என்றும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் தான் ரஷ்ய அதிபர் மற்றும் பொதுமக்களை ஏமாற்றி,நேட்டோ அமைப்புடன் இணைந்து உக்ரைன் குறித்த பொய்யான ஆக்கிரமிப்பு நடத்தியதாகக் கட்டமைப்பை உருவாக்க முயல்கிறார் என்று பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "அவருக்கு எங்கே போர் தேவைப்பட்டது... அப்போது தான் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷோய்கு அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். தனது உடையில் கூடுதலாக ஒரு ஸ்டார் வேண்டும் என அவர் இதைச் செய்துள்ளார். மேலும், ரஷ்யாவில் இருக்கும் பெரும் பணக்காரர்களும் இந்தப் போருக்குக் காரணம்" என்று அவர் தெரிவித்தார். இப்போது வாக்னர் குழுவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதாவது உக்ரைன் நாட்டின் மீது ஆரம்பித்த போர் என்பது இப்போது சில மாதங்களில் ரஷ்யாவில் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது. இது அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications