பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவ வீரர் வீட்டு முகவரியை வெளியிட்ட பெண் தீவிரவாதி
வாஷிங்டன்: பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவ வீரரை கொலை செய்யுமாறு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அழைப்புவிடுத்ததுடன், ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த ராணுவ வீரரின் வீட்டு முகவரியை ஆன்லைனில் அம்பலப்படுத்தியுள்ளார். இந்த மிரட்டலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ராணுவ வீரர் பதில் சவால்விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவன், ஒசாமா பின்லேடன், அமெரிக்க அதிரடிப்படையான தி நேவி சீல் குழு வீரரான ராப் ஓ நெய்ல் என்பவரால் சுட்டுக்கொல்லபட்டார். எனவே அந்த ராணுவ வீரர் குறித்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரிட்டீஷ் நாட்டை சேர்ந்த பெண் தீவிரவாதி உம் ஹுசைன் பிரிட்டானியா என்பவர், ஆன்லைனில் ராப் ஓ நெய்ல் வீட்டு முகவரியை வெளியிட்டுள்ளார். அவர்தான் நம்பர்-1 டார்கெட் எனவும் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிலுள்ள சகோதர, சகோதரிகளே, ராப் ஓ நெய்லை கொல்லுங்கள் என அந்த பெண் அழைப்புவிடுத்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல் குறித்து, ராப் ஓ நெய்ல் கூறுகையில், "என்னை எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும்" என்று தெரிவித்துள்ளார். தற்போது ராப் ஓ நெய்ல் ராணுவத்தில் இருந்து விலகிவிட்டது குறிப்பிடத்தக்கது.