மாஸ்க் போடுங்கள் என்று மக்களை அறிவுறுத்திவிட்டு, மாஸ்க் அணிய மறந்த அமைச்சர்
எடின்பர்க்: கடந்த வாரம் இறுதிச் சடங்கு ஒன்றில் மாஸ்க் அணியாமல் பங்கேற்றது குறித்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார்.
கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவுவதாக வெளியான தகவலும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் கட்டுப்பாடுகள்
இதன் காரணமாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக, பல நாடுகளில் அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்திலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாஸ்க் அணிய மறந்த அமைச்சர்
இந்நிலையில், ஸ்காட்லாந்து முதல் அமைச்சரும் தேசியவாத ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் தலைவருமான நிக்கோலா ஸ்டர்ஜன், கடந்த வாரம் தலைநகர் எடின்பர்க்கில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் மாஸ்க் அணியாமல் பங்கேற்றார். இந்தப் புகைப்படம் புதன்கிழமை வெளியான சன் செய்தித்தாளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தவறு செய்துவிட்டேன் மன்னியுங்கள்
இந்தச் சம்பவத்திற்கு நிக்கோலா ஸ்டர்ஜன் பொதுமக்களிடம் மன்னிப்பைக் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த வெள்ளிக்கிழமை, நான் ஒரு இறுதிச் சடங்கில் கலந்துகொண்டேன். அப்போது, நான் எனது மாஸ்க்கை அணிய மறந்துவிட்டேன். இது ஒரு முட்டாள்தனமான தவறு, என்னை மன்னியுங்கள்.
எனது தவறை சமாளிக்க விரும்பவில்லை
மாஸ்க் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நான் ஒவ்வொரு நாளும் மக்களிடம் பேசுகிறேன். எனவே எதை சொல்லியும் எனது தவறை சமாளிக்க நான் விரும்பவில்லை. நான் தவறு செய்துவிட்டேன். எனது தவறை நினைத்து நானே என்னை திட்டிக்கொள்கிறேன், தயவு செய்து என்னை மன்னிக்கவும்" என்று கூறியுள்ளார்.
ஸ்காட்லாந்து சட்டம் கூறுவது என்ன
கொரோனாவை கட்டுப்படுத்த நிக்கோலா ஸ்டர்ஜன் தலைமையிலான ஸ்காட்லாந்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி ஸ்காட்லாந்தில் பொதுமக்கள் விடுதிகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்டிப்பாக மாஸ்க்குகளை அணிந்திருக்க வேண்டும். நேற்று, ஸ்டர்ஜன் நாடாளுமன்றத்தில் பேசியபோது மாஸ்க்குகளை அணிய வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவுபடுத்தினார்.
எதிர்க்கட்சிகள் அதிருப்தி
இருப்பினும், நிக்கோலா ஸ்டர்ஜன் இந்த செயலுக்கு ஸ்காட்லாந்து எதிர்க்கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், "அவர் இது குறித்து கவனமாக இருந்திருக்க வேண்டும். அவரது இந்த செயல் பொதுச் சுகாதார குறித்த செய்தியின் தீவிரமின்மையைக் குறைக்கும் வகையில் உள்ளது. ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் என்பதாலேயே அவருக்கு ஒரு சட்டம், பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்கக் கூடாது" என்று விமர்சித்துள்ளது.