சீனாவில் இருந்து கராச்சி வந்த நீர்மூழ்கி கப்பல்: காட்டிக் கொடுத்த சாட்டிலைட் போட்டோ
கராச்சி: சீனாவில் இருந்து யுவான் கிளாஸ் அதிநவீன நீர்மூழ்கி போர் கப்பல் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்தது செயற்கைக்கோள் படத்தில் தெரிய வந்துள்ளது.
சீனாவில் இருந்து டைப் 041 யுவான் கிளாஸ் அதிநவீன நீர்மூழ்கி போர் கப்பல் கடந்த மே மாதம் 28ம் தேதி பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இருக்கும் வர்த்தக துறைமுகத்தில் நின்றது ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரிய வந்துள்ளது. அந்த கப்பல் அதிநவீன ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடியது.
அந்த நீர்மூழ்கி கப்பலுடன் டைப் 925 தாஜியாங் நீர்மூழ்கி கப்பலும் கராச்சி வந்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர்மூழ்கி கப்பல் வருவது வழக்கமானது தான். இதற்கு பின்னால் எந்த காரணமும் இல்லை என்றார். சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் 8 நீர்மூழ்கி கப்பல்களை வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைளில் பங்கேற்க சென்ற வழியில் அந்த நீர்மூழ்கி கப்பல் கராச்சி வந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சீன கடற்படை அதிகாரி கேப்டன் வீ ஜியோவ்டாங் கூறுகையில்,
ஏன் நீர்மூழ்கி கப்பல்கள் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படக் கூடாதா? என்றார்.