ஐநா சபையில் போலியான போட்டோவை காட்டிய பாகிஸ்தான்.. முகத்திரையை கிழித்த இந்தியா!
ஐநா சபையில் இந்தியாவுக்கு எதிராக போலியான புகைப்படத்தைக் காட்டி அனுதாபம் தேட முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
நியூயார்க்: ஐநா சபையில் இந்தியாவுக்கு எதிராக போலியான புகைப்படத்தைக் காட்டி அனுதாபம் தேட முயன்ற பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா சபையில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதியான மலிஹா லோதி காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டினார். அப்போது முகம் முழுவதும் பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தையும் அவர் காட்டினார்.
அந்தப் புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது என்றும் காஷ்மீரில் இதுபோன்ற தாக்குதல்கள் நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் இதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மை முகம் என்றும் அவர் கூறினார்.
தெளிவுபடுத்திய இந்தியா
அந்த புகைப்படம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டது. ஆனால் உண்மையில் அந்தப் பெண காஷ்மீரைச் சேர்ந்தவர் அல்ல என்பதை இந்தியா தெளிவு படுத்தியது.
காஸாவை சேர்ந்த பெண்
அந்தப் பெண் 17 வயதான பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சேர்ந்த ரவியா அபு ஜோமா ஆவார்.மேலும் அந்தப்படம் கடந்த 2014-ம் ஆண்டில் காஸா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியபோது ரவியாவின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
உலகம் முழுவதும் வெளியான போட்டோ
அவரை, ஹெய்தி லெவைன் என்ற பிரபல புகைப்பட கலைஞர் படம் பிடித்து வெளியிட்டார். பல நாளிதழ்களில் ரவியாவின் புகைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானுக்கு தலைக்குனிவு
அந்த பாலஸ்தீன பெண்ணை, காஷ்மீர் பெண்ணாக ஐநா சபையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நாடகமாடியது. ஆனால் அவரின் நாடகம் சில மணி நேரங்களில் அம்பலமானதால் ஐநா சபையில் பாகிஸ்தானுக்கு பெரும் தலைக்குனிவு ஏற்பட்டது.
பதிலடி கொடுத்த இந்தியா
இதைத்தொடர்ந்து பாகிஸ்தானின் அட்டூழியத்தை வெளிச்சமாக்கும் வகையில் இந்திய தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மே மாதம் உமர் ஃபயாஸ் என்ற ராணுவ வீரர் திருமண நிகழ்ச்சியில் இருந்து வெளியே இழுத்துவரப்பட்ட கொடூரமாக கொல்லப்பட்ட புகைப்படத்தை காட்டி இந்திய பிரதிநிதி பலோமி திரிபாதி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார்.
அனுதாபம் தேடும் பாகிஸ்தான்
மேலும் காசா புகைப்படத்தைக் காட்டி பாகிஸ்தான் அனுதாபம் தேட முயற்சிப்பதாகவும் பாகிஸ்தானின் முகத்திரையை ஐநா அவையில் கிழித்தார். இதுதொடர்பாக ஐநாவுக்கான இந்திய தூதர் அக்பரூதின் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அக்பரூதின் டிவிட்
அதாவது போலியான புகைப்படத்தைக் காட்டி பாகிஸ்தான் தவறான கதைகளை கட்டியது. ஆனால் இந்தியா உண்மையான புகைப்படங்களை பயன்படுத்து பாகிஸ்தான் தீவிரவாதாத்தின் உண்மை முகத்தை காட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.