'நல்லதல்ல..'ஆப்கன் அரசுக்கு இந்தியா உதவக்கூடாது.. அதேநேரம் சீனா & பாக் உதவி தேவைப்படும்- தாலிபான்கள்
காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது இருக்கும் அரசுக்கு இந்திய ராணுவ உதவிகளைச் செய்வது நல்லதல்ல எனத் தெரிவித்த தாலிபானின் அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ஆப்கனை மீண்டும் கட்டமைக்கச் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளின் உதவி தேவை என்றும் தெரிவித்தார்.
Recommended Video
ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறத் தொடங்கியது. உடனடியாக தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீது தங்கள் தாக்குதல்களைத் தொடங்கிவிட்டன. ஆப்கன் நாட்டின் பல இடங்கள் தாலிபான் கட்டுப்பாட்டில் சென்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் ஆப்கன் - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்திருந்த முக்கிய எல்லை கடக்கும் பகுதியைத் தாலிபான் கைப்பற்றியது. அரசுப் படைகள் மீதான தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது.
கொடைக்கானலை இப்படி சுற்றி பார்த்து இருக்கீங்களா.. ஒர் இனிமையான பயணம்!
இந்தியா கவலை
ஆனால், ஆப்கனில் தாலிபான்களின் வளர்ச்சி என்பது இந்தியாவைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் தாலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் அமைந்தால் அது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என மத்திய அரசு கருதுகிறது. கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை ஆப்கனை தாலிபான் ஆட்சி செய்த போதுதான், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடவடிக்கை உச்சமடைந்தது.
தாலிபான்
இதனால் தாலிபான் கையில் ஆப்கன் சென்றுவிடக் கூடாது என்பதையே இந்தியா விரும்புகிறது. இந்நிலையில், தற்போதுள்ள ஆப்கன் அரசுக்கு இந்திய ராணுவ உதவி அளிக்கக் கூடாது எனத் தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாலிபானின் அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறுகையில், "எங்கள் அமைப்பினர் தோஹாவில் ஆப்கன் அரசுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், தற்போது வரை இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இஸ்லாமிய அரசு
கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் போராடுவது இரண்டு நோக்கத்திற்காகத் தான். முதலில் அந்நிய நாட்டினரின் ஆதிக்கம் ஆப்கனில் இருக்கக் கூடாது. மற்றொன்று ஆப்கன் மக்களைக் கொண்ட ஒரு இஸ்லாமிய அரசை ஏற்படுத்துவது. இந்த இரண்டு நோக்கங்களை அடையவே நாங்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். ராணுவ அணுகுமுறைகளையும் நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் பேச்சுவார்த்தையிலேயே உடன்பாடு ஏற்பட்டால் ராணுவ நடவடிக்கை தேவைப்படாது" என்றார்.
தாக்க மாட்டோம்
தொடர்ந்து ஆப்கனில் தாலிபான் ஆட்சி ஏற்படும்போது இந்தியா உடனான உறவு எப்படியிருக்கும் என்பது குறித்துப் பேசிய அவர், "தூதரகங்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம் என நாங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளோம். தூதரக பணிகளுக்காக ஆப்கன் வந்துள்ள எந்தவொரு நாட்டினர் மீதும் தாக்குதல் நடத்த மாட்டோம். ஆப்கானிஸ்தானைப் புனரமைக்கும் திட்டங்களுக்கு எந்தவொரு நாடும் தங்கள் பங்களிப்பைச் செய்யலாம். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
உதவக் கூடாது
அதேநேரம் இந்தியா நடுநிலையாக இருக்க வேண்டும், தற்போது இருக்கும் ஆப்கன் அரசுக்கு ராணுவ உதவி எதையும் இந்தியா செய்யக் கூடாது. இந்தியா அளிக்கும் ஆயுதங்கள் ஆப்கன் மக்களுக்கு எதிராகவும் நாட்டை அழிப்பதற்குமே பயன்படுத்தப்படும். இது அவர்களுக்கும் (இந்தியா)நல்லதல்ல மக்களுக்கும் நல்லதல்ல. தாலிபான்களுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதா என்பது குறித்து உறுதியான தகவலைக் கூற முடியாது. ஆனால், எனக்குத் தெரிந்தவரை அப்படி எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்றார்.
அனுமதிக்க மாட்டோம்
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத குழுக்களுக்குத் தாலிபான் ஆட்சியில் பயிற்சி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றிப் பேசிய சுஹைல் ஷாஹீன், "நாங்கள் தோஹா உடன்படிக்கையை முறையாகப் பின்பற்றுகிறோம். எந்தவொரு நாட்டிற்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் நபர்களை ஆப்கன் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்.
சீனா பாகிஸ்தான்
கடந்த 40 ஆண்டுகளில் பெரும்பாலான காலம் ஆப்கன் மக்கள் மிக்க கடுமையான துன்பத்தை எதிர் கொண்டுள்ளனர். நாட்டை மீண்டும் கட்டமைக்கச் சீனா, பாகிஸ்தான் மற்றும் அனைத்து நாடுகளின் உதவியும் தேவை. அடுத்து ஆப்கனில் அமையவிருக்கும் அரசு ஒத்துழைப்பு வழங்கும் ஒரு களமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்று அவர் தெரிவித்தார்.