ஜெனிவாவில் அமெரிக்கா தீர்மானத்தை ஏன் ஏற்க முடியாது: இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹா விளக்கம்
ஜெனிவாவில் கடந்த இருமுறை அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்த இந்தியா இம்முறை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஆனால் தீர்மானத்தை எதிர்ப்பதாக அவையில் தெரிவித்தது.
அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஜெனிவாவுக்காக இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹா பேசியதாவது:
இலங்கையில் முப்பதாண்டு காலப் பிரச்சினை 2009ஆம் ஆண்டு முடிவடைந்தது. அதன் பின்னர் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் ஆணையம் 3 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் உட்பட அனைத்து சமூகத்தினருக்கு ஏற்றுக் கொள்ளத்தக்க நிலையான அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கான தனித்துவமான வாய்ப்பைத்தான் முடிவடைந்த போர் இலங்கைக்கு வழங்கியுள்ளது என்பதே எப்போதும் இந்தியாவின் கருத்தாக இருந்து வருகிறது.
மனித உரிமைகளைப் பேணி மேம்படுத்தும் விவகாரத்தில் இலங்கையின் சொந்த முயற்சிகளுக்குதான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் உதவ வேண்டும். அதாவது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமானது தொழில்நுட்ப உதவிகளை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கின்றோம்.
இதற்காகவே கடந்த இரண்டு கால தீர்மானங்களை ஆதரித்தோம். கடந்த ஆண்டில் இலங்கையில் குறிப்பிடும்படியான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கையின் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என்று அனைத்துலக சமூகத்துக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை இலங்கை அரசு நிறைவேற்றியது. மும்மொழிக் கொள்கை, அதிகாரபூர்வ மொழியாக தமிழை மேம்படுத்தல், வடக்கு, கிழக்கில் உள்ள பள்ளிகளை மேம்படுத்துதல் போன்ற இலங்கை அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.
மீள் கட்டமைப்பு, மீள்குடியமர்வு போன்றவற்றிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த காலத்தில் அனைத்துலக மனிதஉரிமைகள் மற்றும் மனித உரிமை சட்டமீறல்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பகரமான விசாரணைகளை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசு தவறிவிட்டது என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளே இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மையத்தை விளக்குகினன. என்றாலும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நோக்கி இலங்கை அரசினால் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டியிருக்கின்றது.
இலங்கை அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்,
இலங்கையில் மனிதஉரிமைகள் நிலவரம் குறித்து ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை விசாரணை செய்து, மதிப்பிட்டு, கண்காணிக்கும்படி அமெரிக்கா தீர்மானம் கோகிறது.
இலங்கை அரசு மற்றும் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஆகிய இரண்டுமே ஒரே சமயத்தில் மனித உரிமை நிலவரம் குறித்து விசாரணை நடத்தும் என்பது ஏற்க முடியாத ஒன்று.
ஒவ்வொரு நாடும் மனிதஉரிமை மீறல்களைக் கவனிப்பதற்கு வலுவான நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மனிதஉரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் பரந்தளவிலான, சுதந்திரமான, நம்பகத் தன்மைமிக்க விசாரணை மூலம் விசாரித்து, குற்றம் இழைத்தவர்களாகக் காணப்படுவோரை நீதியின் முன் கொண்டுவரச் செய்வதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்க வேண்டும்.
இதில் இலங்கை விரும்பும் விதத்தில் ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும். இலங்கையின் தேசிய இறையாண்மையை கீழ்மைப்படுத்தும் விதத்திலான அணுகுமுறை எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதே இந்தியாவின் உறுதியான நம்பிக்கை.
இந்தக் காரணங்களினால், எங்கள் பிரதிநிதிகள் இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது. இதனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமாட்டோம்.
இவ்வாறு திலீப் சின்ஹா பேசினார்.