அமெரிக்காவில் வயதான இந்திய தம்பதி சுட்டுக் கொலை
ஹூஸ்டன்: வடக்கு கரோலினா மாநிலத்தில் வசித்து வந்த இந்திய-அமெரிக்க தம்பதி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ஜாஸ்பர் கவுன்ட்டியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டு அங்கேயே ஒரு அறையில் தங்கியிருந்தவர்கள் இந்திய-அமெரிக்கர்களான காந்திபாய் பட்டேல்(72), அவரது மனைவி ஹன்சாபென் பட்டேல்(67).
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். ஹோட்டல் அறையில் அவர்கள் பிணமாகக் கிடந்ததை பார்த்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஜோஷ்வா லெனார்ட் போச்சர்(20) என்பவர் அந்த தம்பதியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தியது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் ஜோஷ்வாவை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர்.
ஜாஸ்பர் கவுன்ட்டியின் ஷரீப் கிரெக் ஜென்கின்ஸ் கூறுகையில்,
பட்டேல் தம்பதி அந்த ஹோட்டலில் 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தனர். அழகான தம்பி, அதில் சந்தேகமே இல்லை. எதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்று தெரியவில்லை. ஜோஷ்வாவுக்கு அவர்களை தெரியுமா என தெரியவில்லை. போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்தனர் என்றார்.
கொலையை யாரும் நேரில் பார்க்கவில்லை. ஹோட்டல் அறையில் வாக்குவாதம் நடந்ததாகவோ, மோதல் நடந்ததாகவோ பிற அறைகளில் இருந்தவர்கள் புகார் எதுவும் தெரிக்கவில்லை. சப்தம் இல்லாமல் நடந்த கொலை பற்றி போலீசார் ஜோஷ்வாவிடம் விசாரித்து வருகிறார்கள்.