அமெரிக்க வெள்ளை மாளிகையை அதிர வைத்த தமிழ் மாணவியின் கவிதை
வாசிங்டன்: "தலைமுடியைப் போல எனது பூர்வீகமும் உதிரத் தொடங்கி விட்டது.
அம்மா! எங்கே எனக்கு வழுக்கை விழுந்துவிடப் போகிறதோ என அஞ்சுகிறேன்"என்று தமிழகத்தைச் சேர்ந்த மாயா ஈஸ்வரன் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாசித்த கவிதை அனைவரையும் அதிரவைத்துள்ளது.
தாய் மொழியான தமிழை மறந்துவிட்டு ஆங்கிலத்தை மாற்று மொழியாக ஏற்றது மிகுந்த மனவலியை தருகிறது என மாணவி மாயா வாசித்த கவிதை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் கவிதைகள் எழுதும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் சிறுவர், சிறுமியர்களுக்கான நிகழ்ச்சி 2011ல் இருந்து ஆண்டு தோறும் நடந்து வருகிறது.
வெள்ளை மாளிகையில் தமிழ் கவிதை
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் எல்லோரும் தங்கள் படைப்புகளை வாசித்து கொண்டிருக்கையில், சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒரு தமிழ் தம்பதியரின் மகளான மாயா ஈஸ்வரன் ,17 தன் கவிதையை ஆங்கிலத்தில் வாசித்தார்.
தமிழ் மீது காதல்
என் இத்தனை வருட வாழ்வில் நான் இழந்ததை விட, முக்கியமான ஒன்றை நான் இழந்திருக்கிறேன். என் தலை முடி உதிர்வதை போல, என் இனத்தின் அடையாளமான என் தமிழை உதிர்த்து இழந்து கொண்டிருக்கிறேன். என் தாய்மொழியை நான் பேசியே மூன்றாண்டுகள் ஆகிறது. என் தலைமுடி முழுதும் உதிர்வதை போல், என் தமிழை நான் முழுவதும் மறந்து விடுவேனோ என பயப்படுகிறேன். என்று அவரது கவிதை அமைந்திருந்தது.
அதிர்ந்த வெள்ளை மாளிகை
இதை அவர் வாசித்து முடிப்பதற்குள் அரங்கிலிருந்த மிச்சேல் மற்றும் அனைவரும் உணர்ச்சி வசத்தில், உற்சாகத்தோடு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். நீ கவிதையை இயற்றிய விதமும், அதை வெளிப்படுத்திய தன்மையும் சிறப்பாக இருந்தது என மிஷேல் ஒபாமா, மாயாவை மனம் மகிழ பாராட்டினார்.
"அம்மா! நான் தமிழ் பேசி 3 ஆண்டுகள் உருண்டோடி விட்டது" என கனத்தக் குரலுடன் அவர் முடித்ததும், பார்வையாளர்களிடம் இருந்து எழுந்த கரவொலி அடங்க வெகுநேரமானது.
மிஷேல் பாராட்டு
மிஷேல் ஒபாமாவும், மேடை யில் இருந்தபடியே மாயாவின் கவிதையைப் பாராட்டும் விதமாக உரத்தக் குரல் எழுப்பினார். பின்னர் அவர், "மாயா, எங்கே மாயா? சிறந்த கவிதை வாசித்துள்ளாய். மேடையில் உள்ள அத்தனைப் பேரையும் கவர்ந்து விட்டாய்" எனப் புகழாரம் சூட்டினார்.
தமிழக கலாச்சாரம்
நிகழ்ச்சிக்குப்பின் மாயா தனது பேட்டியில், "நான் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவள். ஆனால் பிறந்தது அமெரிக்காவில். எனது கலாச்சாரம், தொன்மை, பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற கவிதைகளை எழுதியிருக்கிறேன். எனது தாய்மொழியை எப்படி இழந்தேன் என்ற அனுபவத்தைத் தான் வெள்ளை மாளிகையில் கவிதையாக மொழிபெயர்த்துக் கூறினேன். தாய்மொழியை மறந்து விட்டு, பிறமொழியை மாற்றாக ஏற்றுக் கொள்வது என்பது மிகுந்த வலி நிறைந்தது" என்றார்.
ஆப்பிள் கவிதை
எங்களது தமிழ் கலாச்சாரம், பண்பாடு தொடர்பாக பல கவிதைகளை நான் எழுதியுள்ளேன். எதிர்காலத்தில் ஒரு டாக்டராக ஆக வேண்டும் என்ற தனது இலட்சியக் கனவையும் செய்தியாளர்களிடம் அவர் வெளிப்படுத்தினார். இதே கவியரங்கத்தில் இந்திய அமெரிக்கரான கோபால் ராமன் என்ற 17 வயது மாணவரும் ஆப்பிள் என்ற தலைப்பில் கவிதை வாசித்தார்.