பாகிஸ்தானில் சகோதரரை பார்த்த மகிழ்ச்சியில் இந்திய பெண் மாரடைப்பால் மரணம்
லாகூர்: 16 ஆண்டுகள் கழித்து தனது சகோதரை பாகிஸ்தானில் சந்தித்த இந்திய பெண் ஒருவர் மகிழ்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் உல்லாசநகரைச் சேர்ந்தவர் சரளா ஜெவத்ராம் பத்லானி. அவரது சகோதரர் மகேஷ் குமார். மகேஷ் பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள லர்கானாவில் வசித்து வருகிறார். உடன்பிறப்புகள் ஒருவரையொருவர் பார்த்து 16 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்நிலையில் விசா பெற்று சரளா பாகிஸ்தான் கிளம்பிச் சென்றார். லாகூர் ரயில் நிலையத்தில் மகேஷை பார்த்த அவர் சகோதர பாசத்தில் அவரைத் தழுவி அழுதார். திடீர் என்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிர் இழந்தார்.
இது குறித்து மகேஷ் கூறுகையில்,
எனது சகோதரி விசா கேட்டு விண்ணப்பித்தபோது 4 முறை அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 5வது முறையாக விண்ணப்பித்தபோது தான் விசா கிடைத்து லாகூர் வந்தார். அவரது குடும்பத்தார் இங்கு வந்து அவரது உடலை இந்தியா எடுத்துச் செல்ல அவர்களுக்கு உடனே விசா வழங்க வேண்டும் என்றார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், அந்த பெண்ணின் சகோதரர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இந்தியா செல்ல விரும்பி விண்ணப்பித்தால் அவருக்கு உடனடியாக விசா வழங்கப்படும் என்றனர்.