இங்கிலாந்தில் வருங்கால மாப்பிள்ளையை வேவு பார்க்கும் இந்திய வம்சாவளி பெண்கள்
லண்டன்: இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாளியினர் தங்கள் மகள்களுக்கு மாப்பிள்ளை பார்க்கையில் அவர்களை பற்றி துப்பறியும் நபர்களை வைத்து உளவு பார்க்கிறார்களாம்.
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரால் துப்பறியும் வேலை பார்க்கும் நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. காரணம் இந்திய வம்சாவளியினர் தங்கள் மகள்களுக்கு பார்க்கும் மாப்பிள்ளையை பற்றிய தகவல் சேகரிக்குமாறு துப்பறியும் நிறுவனங்களை அணுகுகிறார்கள்.
இதனால் துப்பறியும் நிறுவனங்களின் வருமானம் அதிகரித்துள்ளது.
மணமகள்கள்
பெற்றோரை விட பல நேரம் மணமகள்களே துப்பறியும் நிறுவனங்களுக்கு சென்று வருங்கால மாப்பிள்ளை பற்றிய தகவலை சேகரிக்குமாறு கூறுகிறார்கள். தகவல் சேகரிக்க 100 முதல் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மாப்பிள்ளை
துப்பறியும் நிறுவனம் வைத்துள்ள ராஜ் சிங் கூறுகையில், பல வாரங்களாக ஒருவரை பின்தொடர்ந்து தகவல் சேகரிக்க ரூ. 4 லட்சத்து 58 ஆயிரம் வாங்கினேன். சிலர் மாப்பிள்ளை என்ன கார் ஓட்டுகிறார், அதிகமாக மது அருந்துகிறாரா என்பது குறித்து கண்டறியுமாறு கூறுவார்கள் என்றார்.
மோசான பையன்
இங்கிலாந்தில் வசிக்கும் சுக்தேவ் மல்தோரா(54) கூறுகையில், என் மகளுக்கு இந்தியாவில் வசிக்கும் ஒரு பையனை பார்த்தோம். அவரை முதல்முறையாக பார்த்தபோதே ஏதோ சரியில்லை என்று நினைத்தேன். இதையடுத்து துப்பறியும் நிறுவனத்தை அணுகி தகவல் பெற்றேன். அந்த பையன் என் மகளை திருமணம் செய்து இங்கிலாந்தில் செட்டில் ஆன பிறகு அவரை விட்டு பிரிய திட்டமிட்டது தெரியவந்தது. இது முன்பே தெரிந்ததால் எங்களின் நேரமும், பணமும் மிச்சமானது. என் மகளின் வாழ்க்கையும் பாதிக்கப்படாமல் காக்க முடிந்தது என்றார்.
ரகசியம்
லியோன் ஹார்ட் என்ற துப்பறியும் நிபுணர் கூறுகையில், ஒரு மாதத்தில் ஆசியாவைச் சேர்ந்த 10 முதல் 20 பேர் உளவு பார்க்குமாறு என்னிடம் வருகிறார்கள். அதில் 70 சவீதம் பேர் திருமணத்திற்கு தயாராக உள்ள பெண்கள். மாப்பிள்ளை ஏதாவது ரகசியத்தை மறைக்கிறாரா, அவருக்கு வேறு யாராவது பெண்களுடன் தொடர்பு உள்ளதா, அவரின் உடல்நலம் பற்றி விசாரிக்குமாறு கூறுகிறார்கள் என்றார்.