பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதி கிஷோர் பகவான் படுகொலை
பாகிஸ்தான் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிஷோர் பகவான் பாய் உட்பட ஏராளமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கராச்சியின் லந்தி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்த சிறையில் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதியன்று கிஷோர் பகவான் தப்பித்துள்ளர்.
பின்னர் 10 மாதங்கள் கழித்து கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி கிஷோர் பகவானை கைது செய்துவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது. 10 மாதங்களாக பாகிஸ்தான் தெருக்களிலே வாழ்க்கையை நடத்தி வந்தார் கிஷோர் பகவான் என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.
மேலும் கிஷோருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று லந்தி சிறை அதிகார் ஆஷிப் முனாவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் லந்தி சிறையில் கிஷோர் பகவான் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாகவும் அவரது மரணம் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கிஷோரை சக கைதிகள் கொலை செய்தனரா? அல்லது அந்நாட்டு சிறை அதிகாரிகளே கொலை செய்தனரா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கெனவே இந்திய கைதி சரப்ஜித்சிங், பாகிஸ்தான் சிறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இருநாட்டு உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.