”காலன்” ஆன காளான்– ஆஸ்திரேலியாவில் இந்திய இளம்பெண் உயிர்பிழைப்பு!
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்தியாவினை சேர்ந்த இளம்பெண் ஒருவர் காளான் சாப்பிட்டதால் ஏற்பட்ட அலர்ஜியினால் உயிரிழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் ராஜ்விர் கவுர். 25 வயதான இவர், தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அங்கு உள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் காளான் வாங்கியுள்ளார். பின்னர் அவரது தாய் அந்த காளானை உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்துள்ளார்.
குடும்பமே பாதிப்பு:
இதை சாப்பிட்ட ராஜ்விர் கவுர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர் ராஜ்விர் கவுர்தான்.
உடல் உறுப்புகள் பாதிப்பு:
கோமா நிலைக்கு தள்ளப்பட்ட அவரது கல்லீரல் மற்றும் வயிற்றில் உள்ள உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டன. கிட்டத்தட்ட உயிர்போகும் நிலைக்கு சென்ற அவர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்துள்ளார். இதற்கு காரணம் அவர் சாப்பிட்ட காளானில் விஷகாளான் கலந்திருந்ததுதான்.
தானமாக பெற்ற கல்லீரல்:
4 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு ஒரு நல்ல உள்ளம் படைத்தவர் தானமாக கொடுத்த கல்லீரல்தான் அவரை காப்பாற்றி உள்ளது. தற்போது 20 வகையான மருந்துகளை உட்கொண்டால்தான் அவர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மருந்துகள்:
காரணம் அவருக்கு பொறுத்தப்பட்ட கல்லீரல் வேறு இரத்த குரூப்பை சேர்ந்தது. அதனால் கல்லீரலை அவரது உடல் ஏற்றுக்கொள்ள இந்த மருந்துகளை உட்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உடல் பலத்தால் உயிர்பிழைப்பு:
இது குறித்து கவுர் கூறும்போது,"கல்லீரல் இல்லாமலே சில மணி நேரம் உயிருடன் இருந்துள்ளேன். அதனால் எனது உடல் பலமானது" என்று மருத்துவர்கள் தெரிவித்தாக கூறியுள்ளார்.
வழக்கு தொடர்ந்த கவுர்:
தற்போது அந்த பல்பொருள் அங்காடி மீது கவுர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த பல்பொருள் அங்காடி தாங்கள் விற்பனை செய்த காளானில் விஷகாளான் கலக்கவில்லை என்று கூறி உள்ளது.
உரிய விசாரணை:
அந்நாட்டு போலீசாரும், சுகாதார துறையினரும் கடந்த ஆண்டில் இது குறித்து விசாரணை நடத்தினர், அதில் அந்த பல்பொருள் அங்காடியில் காளான் வாங்கியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
திருமண விசாவால் எச்சரிக்கை:
இந்நிலையில், கவுர் திருமண விசாவில் சென்றுள்ளதால் அந்த நாட்டில் தங்கி இருப்பதற்கான விசா காலம் முடிந்து விட்டதாகவும், அதனால் உடனே இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
இறந்தே போய்விடுவேன்:
அதற்கு கவுர், "நான் இந்தியாவுக்கு திரும்பினால் அங்கு இதற்கான மருத்துவ சிகிச்சை கிடைப்பது கடினம். நான் இறந்து விடுவேன் அதனால் இந்த நாட்டில்தான் நான் நிரந்தரமாக வசிக்க அனுமதிக்க வேண்டும்" என்று போராடி வருகிறார்.
விஷக்காளான் கலந்திருந்தது:
காளான் வாங்கியதற்கான ரசீது போன்ற ஆதரங்கள் இல்லாவிட்டாலும், தனக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்று கவுர் நம்புகிறார். அவரது வழக்கறிஞர் ரசீது இல்லாவிட்டால் என்ன அவர் சாப்பிட்ட காளானில் விஷகாளான் கலந்திருந்ததற்கான வலுவான ஆதாரம் இருப்பதாகக் கூறி உள்ளார்.