குழந்தைகளுக்கு பால் இல்லை; தண்ணீர் இல்லை.. ஆப்கானில் அவதிப்படும் இந்தியர்கள்.. சோக காட்சிகள்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஆயிரக்கணக்கானோர் அங்கு இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
Recommended Video
ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.
காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ கூட்டாளிகள் அங்கு பாதுகாப்புக்கு இருக்கின்றன.

மிகப்பெரும் சவால்
எப்படியாவது நாட்டுக்கு திரும்பி விட வேண்டும் என்று பலர் திரண்டு விடுவதால் காபூல் விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. பலர் முண்டியடித்து வருவதால் மக்களை வெளியேற்றுவதில் அமெரிக்க படைகளுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. இந்தியாவும் ஆப்கானில் உள்ள இந்திய மக்களை மீட்டு வருகிறது. இந்திய விமானப்படை (IAF) கடந்த வாரம் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர் மற்றும் தூதரக ஊழியர்கள் உட்பட 120 இந்திய குடிமக்களை வெளியேற்ற ஒரு சிறப்பு விமானத்தை இயக்கியது. துஷன்பே, தஜிகிஸ்தான் மற்றும் கத்தார் வழித்தடங்கள் வழியாக இந்திய மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

பெண்கள் படும்பாடு
இந்த நிலையில் காபூலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு வந்த இந்திய விமானப்படை விமானம் தாயகம் திரும்பி உள்ளது. அதே வேளையில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஒரு திருமண மண்டபத்திற்குள் சுமார் 250-300 இந்தியர்கள் இன்னும் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் இந்தியாவை நோக்கி திரும்புவதை எதிர்நோக்கி இருக்கின்றனர். இவ்வாறு காபூல் விமான நிலையத்தில் காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள் படும்பாட்டை வெறும் வார்த்தையால் விவரித்து விட முடியாது.

குடிநீர், பால் இல்லை
பசியால் வாடும் தங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க முடியவில்லை. குடிக்க தண்ணீர் கொடுக்க முடியவில்லை என்று பல அவலங்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர். டெல்லியை சேர்ந்த ஒரு பெண், விமான நிலையத்திற்கு வெளியே காத்திருக்கும் தனது மகளின் நிலை குறித்து சோகத்துடன் விவரிக்கிறார். ''எனது மகள், மருமகன் காபூலில் சிக்கி உள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு இந்திய தூதரகத்தில் இருந்தவர்கள் எந்த பொருட்களும் இல்லாமல் (காபூல்) விமான நிலையத்திற்கு வரும்படி அவர்களிடம் கூறினர். மூன்று நாட்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கபட்டனர். அவர்களை வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

விமானப்படை மீட்க வேண்டும்
நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மீண்டும் பேருந்தில் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பேருந்தில் காத்திருந்தபோது தலிபான்கள் வந்து 50 பேரை அழைத்துச் சென்றனர். எனது இளைய சகோதரரையும், எனது மகளையும் அங்கு இருந்து அழைத்து சென்றனர். தலிபான்கள் ஆவணங்களை சரிபார்த்த பிறகு அவர்களை விடுவித்தனர். கடந்த மூன்று நாட்களாக அவர்கள் சாலையில் இருக்கின்றனர். குழந்தைக்கு பால் இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. இந்திய விமானப்படைஅவர்களை மீட்டு வர வேண்டும்' என்று கூறி இருக்கிறார்.

விண்ணை முட்டும் விலைவாசி
ஆப்கானில் வங்கிகள் முழுமையாக இயங்கவில்லை. இது தவிர பால், குடிநீர், ரொட்டி உள்ளிட்ட பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. மேலும், அதிகளவு பணம் கொடுத்தாலும் இந்த பொருட்கள் கிடைப்பதுமில்லை. மொத்தத்தில் ஆப்கான் முழுவதுமே இதுபோன்ற பரிதாப காட்சிகள் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications