பல் வலியால் சிறையிலிருந்து தப்பிய கைதி... பல்லைப் பிடுங்கிய பின்னர் சரண்.. ஹிஹிஹி!
ஸ்டாக்ஹோம்: அதிக வலி கொடுத்தப் பல்லுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறையிலிருந்து தப்பிய கைதி ஒருவர், பல் மருத்துவரைச் சந்தித்து பல்லைப் பிடுங்கிக் கொண்ட பின்னர் மீண்டும் போலீசில் சரணடைந்த விநோதச் சம்பவம் ஒன்று ஸ்வீடனில் நடந்துள்ளது.
சுவீடன், வானர்ஸ்போர்க் நகரில் உள்ளது பாதுகாப்பு அதிகம் இல்லாத ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அதில், ஒரு மாத ஜெயில் தண்டனைக்காக அடைக்கப்பட்டிருந்த 51 வயதான தண்டனை கைதி, ஒருவர் சமீபகாலமாக கடும் பல்வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இது குறித்து ஜெயில் அதிகாரிகளிடம் தெரிவித்த கைதிக்கு, சிறை மருத்துவம் பல் வலியைக் குணமாக்கவில்லை. எனவே, வெளியில் சென்று மருத்துவம் பார்க்க முடிவு செய்துள்ளார். அதன்படி, திடீரென ஒருநாள் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சிறையிலிருந்து தப்பிய பின்னர், நேராக பல் மருத்துவர் ஒருவரைச் சந்தித்த அந்தக் கைதி, தன்னைப் பாடாய்படுத்திய பல்லை ஒரு வழியாக பிடுங்கி விட்டார்.
வந்தவேலை முடிந்த திருப்தியில் மீண்டும் காவல்நிலையம் சென்ற கைதி, தானாகவே போலீசில் சரணடைந்து விட்டார். அவர்கள் அவரை சிறையில் ஒப்படைத்தனர்.
சிறை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது பல்லைப் பிடுங்க தப்பித்துச் சென்றதை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரை எச்சரித்ததுடன், தண்டனை காலத்தை ஒருநாள் அதிகரித்து விட்டனர் சிறை அதிகாரிகள்.