தீவிரவாதிகளுடன் கடுமையாக போராடி திக்ரித் நகரை மீட்ட ஈராக் ராணுவம்
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்த திக்ரித் நகரை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது.
ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகிறார்கள். பலுஜா, மொசுல் ஆகிய நகர்களை கைப்பற்றிய தீவிரவாதிகள் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 140 கிமீ தொலைவில் உள்ள திக்ரித் நகரை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கைப்பற்றினார்கள். அந்த நகரில் சன்னி முஸ்லீம்கள் தான் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் ஷியா முஸ்லீம்கள் தலைமையிலான அரசு தங்களை ஒதுக்கி வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் திக்ரித் நகரில் ஈராக் ராணுவத்தின் ஆயிரக்கணக்கான வீரர்கள் நுழைந்தனர். மேலும் துப்பாக்கி சுடும் வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இது தவிர ஹெலிகாப்டர் மூலமும் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தீவிர தாக்குதலை சனிக்கிழமை நடத்தியது. பீரங்கிகள் மூலம் குண்டுகள் போடப்பட்டன. இந்த தாக்குதலின்போது திக்ரித் நகர மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர்.
இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் பலியாகினர். கடும் போராட்டத்திற்கு பிறகு ராணுவம் திக்ரித் நகரை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்டது. ஈராக்கின் முன்னாள் அதிபரான சதாம் உசேனின் சொந்த ஊர் திக்ரித் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசுக்கு எதிராக போராடும் தீவிரவாதிகள் சாதம் உசேனின் ஆதரவாளர்கள் ஆவர்.
இதற்கிடையே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தலைநகர் பாக்தாத் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.