டூர் போன கணவர்.. கோபத்தில் மனைவி எடுத்த ஏல முடிவு.. வாங்க போட்டி போட்ட 13 பெண்கள்!
கணவரை விற்கப் போவதாக ஆன்லைனில் மனைவி பதிவு வெளியிட்ட வேடிக்கையான சம்பவம் நியூசிலாந்தில் நடந்துள்ளது.
வெலிங்டன்: நியூசிலாந்தில் நண்பர்களுடன் சுற்றுலா சென்றதால், தனது கணவரை ஆன்லைனில் ஏலத்திற்கு விடுவதாக, மனைவி ஒருவர் அறிவிக்க, அதனை உண்மை என நம்பி 13 பெண்கள் அந்த ஆணை வாங்க முயற்சித்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதையே பெரிதும் விரும்புகின்றனர். பாதுகாப்பாக, அதே சமயம் சலுகைகளுடனும் கிடைப்பதாலே பலரும் எப்போதும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களிலேயே தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர். பொருட்களை வாங்குவதற்கு மட்டுமின்றி, விற்பதற்கும் ஆன்லைன் தளங்கள் உதவியாக இருப்பதால், வியாபாரிகளுக்கும் இது உதவியாக இருக்கிறது.
ஆனால் இத்தகைய வசதிகள் சமயத்தில் விபரீதமாகவும் ஆகி விடுகின்றன. நியூசிலாந்தில் நடந்த சம்பவமும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

கணவர் விற்பனைக்கு
அயர்லாந்தைச் சேர்ந்தவர் லிண்டா மெக்அலிஸ்டர் என்ற பெண். இவர் தனது கணவர் ஜான் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். இவர் விளையாட்டாக ஆன்லைன் தளம் ஒன்றில் தனது கணவரை விற்பனை செய்ய இருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கான ஏலம் ஆரம்பிப்பதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ரிட்டன் இல்லை
மேலும், ஜான் 6 அடி 1 அங்குலம் உடையவர், வயது 37, படப்பிடிப்பு மற்றும் மீன்பிடிக்க விரும்புவார், மிகவும் நல்லவர் என லிண்டா தனது பதிவில் கூறியிருந்தார். ரிட்டன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது என்ற நிபந்தனையுடன், ஏலத்தை தொடங்கிய லிண்டாவின் பதிவை உண்மை என நினைத்து விட்டனர் இணையவாசிகள்.

12 பெண்கள் ஆர்வம்
அதோடு விலையும் மிகக் குறைவாகவே லிண்டா குறிப்பிட்டிருக்க, 12 பெண்கள் ஜானை வாங்க விருப்பம் தெரிவித்து, ஏலத்தில் பங்கு பெற்றுள்ளனர். இந்த ஏலம் 100 டாலர்களுக்கு, அதாவது இந்திய ரூபாயில் ரூ. 7,400 வரை சென்றது. ஒரு கட்டத்தில் பெண் ஒருவர் தனது கணவரை ஏலத்திற்கு எனப் பதிவு போட்டிருப்பது சம்பந்தப்பட்ட இணையதளத்தின் கவனத்திற்கு தெரிய வந்தது.

நீக்கப்பட்ட பதிவு
உடனடியாக அந்தப் பதிவை அந்த இணையதளம் நீக்கியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இணையதளத்தின் மேலாளர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "எனக்கு ஞாபகம் தெரிந்தவரை இதுபோன்று எங்கள் இணையதளத்தில் கணவரை யாரும் விற்றதில்லை. இதுதான் முதல்முறை" எனத் தெரிவித்துள்ளார்.

கோபத்தில் போட்ட பதிவு
இரண்டு நாட்கள் தன்னையும், தன் குழந்தைகளையும் தனியே வீட்டில் விட்டுவிட்டு, தன் நண்பர்களுடன் ஜான் சுற்றுலா சென்ற கோபத்தில் லிண்டா இப்படி ஒரு ஏல அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அதற்குள் இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகிவிட்டது. கணவரை மனைவியே ஆன்லைன் ஏலத்தில் விற்க முயற்சித்ததை ஆச்சர்யத்துடன் பலர் தங்களது பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications