இர்மா புயல் பாதிப்பு - ஃப்ளோரிடா முதியோர் காப்பகத்தில் எட்டு பேர் மரணம்!
மயாமி(யு.எஸ்): ஃப்ளோரிடாவை தாக்கிய இர்மா புயலால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட முதியோர் காப்பகத்தில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இர்மா புயலால் ஃப்ளோரிடா மாநிலம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் வினியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நிலமை சீரடைந்து வருகிறது. இந் நிலையில், மருத்துவ உதவி தேவைப்படும் முதியோர்களுக்கான நர்சிங் ஹோம் ஒன்றில், மின்சார தடையினால் 8 பேர் உயிரிழந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மயாமி- ஃபோர்ட் லாடர்டேல் மாநகரப் பகுதியில் உள்ள ஹாலிவுட் ஹில்ஸ் நகரில் உள்ள காப்பகத்தில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இர்மா புயலை ஒட்டி, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியிருந்தது. புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், மின்சார ஜெனரேட்டர்கள் செயல்படுவதை உறுதி செய்தாதாக காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், புயல் நேரத்தில் அருகில் உள்ள ட்ரான்ஸ்ஃபார்மரில் மரம் விழுந்ததால், காப்பகத்தில் உள்ள ஏசி-க்கு மின்சப்ளை நின்றுவிட்டது. ஃபேன், போர்ட்டபிள் ஏசிக்களைக் கொண்டு அவர்களால் சமாளிக்க முடியவில்லையாம். ஏற்கனவே மருத்துவ சிகிச்சையில் இருக்கும் முதியவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அபாயநிலைக்கு சென்றுவிட்டார்கள்.
ஒருவர் முதலிலேயே உயிரிழந்து விட்டார். தொடர்ச்சியாக மூன்று பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவசர உதவி கோரப்பட்ட்டுள்ளது. பாரா மெடிக்கல் உதவி கிடைப்பதற்கு முன்னதாகவே மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர். காப்பகத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அனைவரையும் வெளியேற்றும் முயற்சி நடந்துள்ளது. அதற்குள் இன்னும் நான்கு பேர் இறந்து விட்டனர்.
எப்படி இந்த உயிரழப்பு ஏற்பட்டது என்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த காப்பகத்தில், புதிதாக சேர்க்கை அனுமதிக்கக்கூடாது என்று கவர்னர் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே , விதிமுறைகளை மீறியதற்காக இந்த காப்பகத்திற்கு நோட்டீஸ் அனுப்பட்டிருக்கிறதாம். ஓய்வு பெற்றவர்களின் சொர்க்கபுரியாக விளங்கும் ஃப்ளோரிடாவில், 84 ஆயிரம் பேர்கள் தங்குவதற்கான 683 காப்பகங்கள் உள்ளன. 99 ஆயிரம் பேர்களுக்கான இடவசதியுடன் 3100 முதியோர் இல்லங்களும் உள்ளன
சுமார் 150 காப்பகங்களில் ஜெனரேட்டர்களுடன் கூடிய முழு மின்சார வசதிகள் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 8 பேர் மரணத்தைத் தொடர்ந்து, அனைத்து காப்பகங்களிலும் உள்ள வசதிகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த ஹாலிவுட் ஹில்ஸ் நகரில் அதிகாரிகள் ஏனைய காப்பகங்களில் சோதனை நடத்தியுள்ளார்கள். மாநிலம் முழுவதும் காப்பகங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் ஆய்வு நடத்தப்படுகிறது.
8 பேர் மரணம் குறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.