அமெரிக்காவில் ஆசிய இஸ்லாமியர்கள் உளவு பார்க்கப்படுகிறார்கள்- பரபரப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவிலுள்ள ஆசியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள், அந்த நாட்டு உளவு அமைப்பால் ரகசியமாக கண்காணிக்கப்படுவதாகவும், அவர்களின் இ-மெயில் பரிமாற்றங்கள் பார்க்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் இயங்கிவரும் தெற்காசிய அமைப்புகளுக்கான தேசிய கூட்டணி என்ற அமைப்பு இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
தனிமனித உரிமை மீறல்
அமெரிக்காவிலுள்ள மசூதிகள், மாணவர் சங்கங்கள் போன்றவை உளவுத்துறையின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் அந்த அமைப்பு, நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் ஒவ்வொரு நபருக்கும் அளிக்கப்பட வேண்டிய, தனிமைக்கு உரிமை, சுதந்திரத்துக்கான உரிமை அமெரிக்காவில் மறுக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இ-மெயில் கண்காணிப்பு
அமெரிக்காவிலுள்ள இஸ்லாமியர்களின் இ-மெயில் பரிமாற்றங்களை எ.பி.ஐ உளவு அமைப்பும், தேசிய பாதுகாப்பு ஏஜென்சியும் கண்காணித்து வருகிறது.
இந்திய முஸ்லிம் வக்கீல்
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான ஆசிம் காபூர் என்ற புகழ்பெற்ற வழக்கறிஞரும் இந்த உளவுக்கு தப்பவில்லை. இவர் பெரும்பாலும் தீவிரவாதம் தொடர்புள்ள வழக்குகளில் ஆஜராகுவதால் இவரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது உளவுத்துறை.
முக்கிய பிரமுகர்கள்
பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட, வழக்கறிஞர், பைசல் ஹில், பேராசிரியர் ஹூசங் அமிரஹ்மடி, முஸ்லிம் குடிமை உரிமைக்கான வழக்கறிஞர் அகா சையீது, அமெரிக்க-இஸ்லாமியர் விவகார கவுன்சிலின் இயக்குநர் நிஹாத் அவாட் ஆகியோரின் இ-மெயில்களும் கண்காணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஸ்னோடென் ஆரம்பித்தது
அமெரிக்க உளவாளி ஸ்னோடென் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளதாக இன்டர்செப்ட் என்ற ஆன்லைன்-புலனாய்வு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மெயில்கள்
2002 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 2,485 இ-மெயில் முகவரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இன்டர்செப்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஆசிம் காபூர் கூறுகையில், என்னை உளவு பார்க்க எனது பெயர் ஆசிம் காபூர் என்று இருப்பதுதான் காரணம் என்று நினைக்கிறேன். நான் இந்தியாவில் பிறந்து இளம் வயதில் சவுதிக்கு சென்று தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன். புனித பயணங்களுக்கு சென்றுவந்துள்ளேன். இந்த விஷயத்தில் கண்டிப்பாக எதையாவது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மறுப்பு
இந்த குற்றச்சாட்டை அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதத்தின்பெயரலாலோ, இனத்தின் பெயராலோ, தேசத்தின் அடிப்படையிலோ யாரையும் உளவு பார்த்தது கிடையாது. தேச பாதுகாப்புக்காக யாரையாவது உளவு பார்க்க வேண்டும் என்றால், அதற்கு கோர்ட் அனுமதி தேவை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.