5 மாதத்தில் 4 இடத்திற்கு தாவூத் இப்ராகிமை இடம் மாற்றிய ஐஎஸ்ஐ: ஐபி
கராச்சி: இந்தியாவின் நம்பர் ஒன் எதிரிகளில் ஒருவரான தாவூத் இப்ராகிமை பொத்திப் பொத்திப் பாதுகாத்து வரும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, கடந்த ஐந்து மாதங்களில் தாவூத்தை 4 முறை இடம்மாற்றம் செய்துள்ளதாக ஐபிக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தாவூத் இப்ராகிம் முன்பு போல சுதந்திரமாக செயல்படுவதில்லை தற்போது. அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதப்படுகிறது. அதை விட முக்கியமாக மோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை இல்லாத அளவுக்கு தாவூத்தைப் பிடிக்க பல வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் உதவியையும் கூட இந்திய அரசு ரகசியமாக நாடியுள்ளதாகவும் முன்பு தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து தாவூத்தைப் பாதுகாக்க பல இடங்களுக்கும் மாற்றி மாற்றி காத்து வருகிறதாம் ஐஎஸ்ஐ. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 4 முறை தாவூத்தை இடம்மாற்றியுள்ளதாம் ஐஎஸ்ஐ. இதுகுறித்தத் தகவல் இந்தியாவின் உளவு அமைப்பான ஐபிக்கு கிடைத்துள்ளது.
போதைப் பொருள் கும்பல்
தாவூத் இப்ராகிம் ஒரு நேரத்தில் 5000க்கும் மேற்பட்டோரை வைத்து மிகப் பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். சமீப காலமாக அந்த தொழிலை தாவூத் நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
3 நாட்களாக நடமாட்டமே இல்லை
குறிப்பாக கடந்த 3 நாட்களாக இந்த கும்பல் முற்றிலும் தனது செயல்பாட்டை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் தாவூத்துக்கு அதிகரித்து வரும் நெருக்கடியைக் குறைக்கவே இப்படி தொழிலை நிறுத்தி விட்டது போல நாடகமாடுகிறது அந்தக் கும்பல் என்று ஐபி சந்தேகிக்கிறது.
சோட்டா ஷகீலும் காணவில்லை
அதேபோல, தாவூத்தின் மிக நெருங்கிய கூட்டாளியான சோட்டா ஷகீலும் கூட அமைதியாகி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில்தான் சோட்டா ஷகீல் அமைதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தாவூத்துக்காக
எப்பாடுபட்டாவது தாவூத்தைக் காப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாம் ஐஎஸ்ஐ. இதனால்தான் ஷகீலை அமைதிப்படுத்தியும், போதைப் பொருள் சிண்டிகேட்டை தொழிலை நிறுத்துமாறும் அது உத்தரவிட்டுள்ளதாம்.
கராச்சி - பங்களாதேஷ்
கராச்சியில்தான் நீண்ட காலமாக பத்திரமாக தங்கியுள்ளார் தாவூத் இப்ராகிம். ஆனால் பாதுகாப்பு கருதி அவரை பலஇடங்களுக்கும் மாற்றி வருகிறது ஐஎஸ்ஐ. இடையில் வங்கதேசத்திற்கும் கூட அவரை சில நாட்கள் மாற்றியதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த மே மாதம் அவரை கராச்சியிலிருந்து வடக்கு வசிரிஸ்தானுக்கும் மாற்றினர். வடக்கு வசிரிஸ்தான் என்பது தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டு புரையோடிப் போன பழங்குடியினர் பகுதியாகும்.
மீண்டும் கராச்சிக்கு
பின்னர் அவரை மீண்டும் கராச்சிக்கே கொண்டு வந்து விட்டனராம். அமெரிக்க படையினர் தாவூத் இருப்பிடத்தை மோப்பம் பிடிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியானதே அவரை மீண்டும் கராச்சிக்கு கொண்டு வரக் காரணமாம்.
துபாய்க்கு மாற்றும் யோசனை
மேலும் அவரை துபாய்க்குக் கொண்டு செல்லலாமா என்ற யோசனையும் ஐஎஸ்ஐயிடம் இருந்தது. ஆனால் அதில் பாதுகாப்பு அபாயம் இருப்பதாக கருதியதால் அதை கைவிட்டு விட்டனராம்.
தாய்லாந்து - நைரோபி
அதேபோல தாய்லாந்து, நைரோபி உள்ளிட்ட நாடுகளுக்குக் கொண்டு செல்லவும் திட்டமிட்டு வந்தனர். ஆனால் இன்டர்போல் வந்து பிடித்து விட்டால் சிக்கலாகி விடும் என்பதால் அதையும் விட்டு விட்டனராம்.
பாகிஸ்தானுக்கு தாவூத் அவசியம்
தாவூத்தை வைத்து இந்தியாவுக்கு எதிராக பல விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளது, ஈடுபட்டு வருகிறது பாகிஸ்தான். எனவே அவரைக் காப்பது பாகிஸ்தானுக்கும், ஐஎஸ்ஐக்கும் மிகவும் முக்கியமானதாகும். எனவேதான் தாவூத்தை இப்படி பொத்திப் பொத்திக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அல் கொய்தாவுக்கு ஆபத்பாந்தவன்
மேலும் தாவூத் இப்ராகிம் அல் கொய்தாவுக்கும் ஆதரவாக இருக்கிறார். அவரிடம் உள்ள பணம் அல் கொய்தாவுக்குத் தேவைப்படுகிறது. நாளையே ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா வலுவாக காலூன்றும் நிலை ஏற்படும்போது தாவூத்தின் பணம்தான் தங்களுக்குக் கை கொடுக்கும் என்று அல் கொய்தாவும் கருதுகிறது.
ஐஎஸ்ஐக்கும் தாவூத் பணம் மீதே குறி
அதேபோல ஐஎஸ்ஐயும் கூட தாவூத்தின் பணத்துக்காகத்தான் அவரைக் கருத்தாக பார்த்துக் கொள்கிறது. ஆனால் இந்தப் பணக் குவியலை காலி செய்து பொருளாதார ரீதியாக தாவூத்தை நலிவடைந்த நிலைக்குத் தள்ளி விட்டால் தானாகவே தாவூத் மீது ஐஎஸ்ஐக்கு பிடிப்பு குறைந்து விடும் என்பது இந்தியாவின் திட்டம். அதைத்தான் தற்போது தெளிவாக காய் நகர்த்தி வருகிறது இந்தியா.
பின்லேடன் டுமீல் பாணியில்!
மறுபக்கம் பின்லேடனை எப்படி அமெரிக்கப் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து வீழ்த்தித் தூக்கிச் சென்றனரோ, அதேபோல அமெரிக்காவின் உதவியுடன் தாவூத்தை இந்தியா தூக்கிச் செல்லும் வாய்ப்புகள் இருப்பதாகவும் பாகிஸ்தானில் ஒரு பயம் உள்ளது. இதுவும் கூட தாவூத்தை அது இடமாற்றி வருவதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது.