கோலன் குன்றுப் பகுதியில் பறந்த சிரிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல்
ஜெருசலேம்: சிரிய நாட்டு போர் விமானம் ஒன்றை இன்று இஸ்ரேல் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் வசம் உள்ள கோலன் குன்றுப் பகுதியில் பறந்த சிரிய நாட்டு போர் விமானத்தை இஸ்ரேல் படையினர் சுட்டு வீ்ழ்த்தி விட்டனர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் தவறுதலாக இஸ்ரேல் வசம் உள்ள பகுதிக்குள் நுழைந்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தாக்குதலின் பின்னணியில்...
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்கப் படையினரும், வளைகுடாகூட்டணிப் படையினரும் நடத்திய விமானத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல்...
இருப்பினும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராக சிரியாவில் தாக்குதல் நடத்தும் அமெரிக்கத் திட்டத்திலிருந்து ஒதுங்கியிருக்கிறது இஸ்ரேல். எனவே இந்தத் தாக்குதலுக்கும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறப்படுகிறது.
சுகோய் போர் விமானம்...
அமெரிக்கத் தயாரிப்பான பேட்ரியாட் ஏவுகணை மூலம் சிரிய விமானத்தைத் தாக்கித் தகர்த்துள்ளது இஸ்ரேல். வீழ்த்தப்பட்ட சிரிய விமானம், ரஷ்யத் தயாரிப்பு சுகோய் போர் விமானமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகச் சிறந்த போர் விமானங்களில் ஒன்று சுகோய்.
தடையை மீறிய விமானம்...
சிரியாவில் உள்ள கோலன் குன்றுகளை கடந்த 1967ம் ஆண்டு நடந்த போரின்போது இஸ்ரேல் படைகள் கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்தன. அன்று முதல் இங்கு இஸ்ரேல் படைகள் நிலை கொண்டுள்ளன. அந்தப் பகுதியில் சிரியா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள் பறக்க இஸ்ரேல் தடை விதித்துள்ளது. இந்தத் தடையை மீறியதால்தான் சிரிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முதன்முறை...
கடந்த 30 ஆண்டுகளில் சிரிய விமானம் ஒன்றை இஸ்ரேல் சுட்டு வீழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
குண்டு வீச்சு தாக்குதல்...
சம்பந்தப்பட்ட விமானமானது, இஸ்ரேல் வைத்துள்ள கோலன் குன்றுகளுக்கு அருகே உள்ள சிரிய நகரமான குனித்ரா என்ற நகரில் போராளிகளின் நிலைகள் மீது குண்டு வீச்சில் ஈடுபட்டதாக சிரிய மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. அப்போதுதான் அதை இஸ்ரேல் படையினர் தாக்கி வீழ்த்தினர்.
கண்டனம்...
விமானத்தின் விமானி தாக்குதலுக்கு முன்பாக தப்பி விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதலுக்கு சிரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
சமரசம் இல்லை...
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் மோஷே யாலோன் கூறுகையில், எங்களது பகுதியில் பிற நாட்டினரோ அல்லது தீவிரவாத குழுக்களோ ஊடுறுவுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது. எங்களது பாதுகாப்பை சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.