மே 5 முதல் 8ம் தேதி வரை துபாயில் அரேபியன் டிராவல் மார்க்கெட்
துபாய்: துபாயில் அரேபியன் டிராவல் மார்க்கெட் மே 5ம் தேதி துவங்கியது. இது வரும் 8ம் தேதி வரை துபாய் உலக வர்த்தக மைய கண்காட்சி மையத்தில் நடைபெறும்.
அரேபியன் டிராவல் மார்க்கெட்டில் உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்கள், டிராவல்ஸ் உள்ளிட்ட 2 ஆயிரத்து 700 நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா உள்ளிட்ட 68 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இதன் மூலம் சுற்றுலாத்துறை சார்ந்த நிறுவனங்களின் வருமானமும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையொட்டி இந்திய அரசின் சுற்றுலாத்துறையின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் அமீரகத்துக்கான இந்திய தூதர் டி.பி. சீதாராம், இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு, வளைகுடா பிராந்திய சுற்றுலாத்துறை இயக்குநர் மனாஸ் பட்நாய்க், இந்திய அரசின் சுற்றுலாத்துறை பொருளாதார ஆலோசகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலகளாவிய அளவில் செய்தியாளர்கள் பங்கேற்ற இந்த சந்திப்பில் இந்தியாவின் பழம்பெருமை, கலாச்சாரம், மருத்துவம், சுற்றுலா, வணிகம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் முக்கியத்துவத்தை விளக்கினர். ஆண்டின் 365 நாட்களும் இந்தியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தரலாம் என்றதுடன் அதற்கான காரணத்தையும் கூறினர்.
பாலைவனம், கடல், மலை, பனி உள்ளிட்ட இந்தியாவின் சூழல் செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. மிகவும் சுவாராஸ்யமாகச் சென்று கொண்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் திடீரென இந்திய தூதர் சீதாராம் தேர்தல் சுற்றுலா என்ற புதிய சுற்றுலாவையும் சேர்த்துக் கொள்ளலாம் என்றதும் அரங்கம் சிரிப்பலையில் ஆழ்ந்தது.
ஆம் உலகில் எங்குமில்லாத வகையில் சுமார் ஒரு மாத காலம் தேர்தல் இந்தியாவில் நடைபெறுகிறது. மில்லியன் கணக்கில் வாக்காளர்கள் தங்களது வாக்காளர்களைப் பதிவு செய்கின்றனர். இதுபோன்ற சூழலைப் பார்க்கவே சுற்றுலாவினை ஏற்படுத்தலாம் என்றார்.
இந்தியாவில் 12 வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்தில் விசா வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் அனைத்து நாட்டுப் பயணிகளுக்கும் இது போன்றதொரு சூழலை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.