இந்த ரயிலில் ஏறினால்.. ஒரு மணி நேரத்தில் சென்னையிலிருந்து நெல்லைக்கு ஓடி விடலாம்!
டோக்கியோ: அதி வேக அதி பயங்கர ரயிலை முன்னோட்டம் விட்டுப் பார்த்துள்ளது ஜப்பான். உலகிலேயே அதி வேகமான புல்லட் ரயில் என்ற பெயரைப் பெற்றுள்ள இந்த புல்லட் ரயிலானது ஒரு மணி நேரத்தில் 603 கிலோமீட்டர் தூரம் என்ற அளவுக்கு பாய்ந்தோடி புதிய சாதனை படைத்துள்ளது. மேலும் இதற்கு முன்பு அதி வேகமாக போன தனது சாதனையையும் இது முறியடித்து உள்ளது.
இந்த ரயிலை நம்ம ஊரில் ஓட்டுவதாக இருந்தால், சென்னையிலிருந்து கிட்டத்தட்ட நெல்லைக்கு ஒரு மணி நேரத்தில் ஓடிப் போய் விடலாம். அப்படி ஒரு வேகம் அஜால் குஜால் வேகம்...
இந்திய அரசும் புல்லட் ரயில் குறித்து கனவு கண்டு கொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஜப்பானின் இந்த புல்லட் ரயில் குறித்த விவரத்தைப் பார்த்தால் தலை சுற்றி வருகிறது. நம்மூருக்கெல்லாம் எப்பப்பா புல்லட்டை கொண்டு வருவாங்க என்கிற ஆச்சரியமும், மலைப்பும் பின்னாலேயே வந்து விரட்டுகிறது.
யோசனையில் நாம்
நாம் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்துவது குறித்து யோசித்து வருகிறோம். ஆனால் ஜப்பானியர்களோ, புல்லட் ரயிலின் எதிர்காலத்துக்குப் போய் விட்டார்கள். கிட்டத்தட்ட விமான பயணத்திற்கு நிகரானதாக இந்த புல்லட் ரயில் போக்குவரத்தை அவர்கள் மாற்றி விட்டார்கள்.
புயல் வேக ரயில்
சுருக்கமாக மெக்லெவ் (அதாவது magnetic levitation என்பதன் சுருக்கம்) என்று அழைக்கப்படும் புல்லட் ரயில்கள் வழக்கமாவே அதி வேகமாகப் போகக் கூடியவைதான். ஆனால் ஜப்பானில் தற்போது பரிசோதிக்கப்பட்டுள்ள புல்லட் ரயிலானது மணிக்கு 600 கிலோமீட்டருக்கும் மேலான வேகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாறுபட்ட ரயில்
ஏற்கனவே ஜப்பானில் ஷின்கான்சென் புல்லட் ரயில் சேவை உள்ளது. ஆனால் மெக்லெவ் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுவும் புல்லட் ரயில்தான். ஆனால் வேகம், நவீனம், வசதிகள் என்று பார்த்தால் மொத்தமாக சொர்க்க அனுபவத்தைத் தரக் கூடியதாக உள்ளது.
தரையில காலே படலையே
கால் தரையிலேயே படலையே.. அப்படியே பறக்குறியே என்பார்கள் நம்ம ஊர்களில். இந்த ரயிலும் அப்படித்தான். தண்டவாளத்தில் ரயிலைப் பார்க்க முடியாது. மாறாக அதிலிருந்து 10 சென்டிமீட்டர் உயரத்தில்தான் ரயில் பறந்தோடுகிறது. மின்சாரம் மூலம் தூண்டப்படும் காந்த சக்தியில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
மின்சாரம் கம்மிதான்
ஆரம்பத்தில் தண்டவாளத்தில் ஓடத் தொடங்கும் ரயில் பின்னர் காந்தத்தின் தூண்டுதலால் மேலே கிளம்பி மின்னல் வேகத்தில் பறக்கிறது. இதற்கு அதிக அளவிலான மின்சாரமும் தேவைப்படுவதில்லை என்பதில்தான் ஜப்பானியர்களின் மூளை அடங்கியுள்ளது.
பெரும் பணம் தேவை
ஆனால் இந்த ரயில்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு செலவுகள் பல கோடிகளைத் தாண்டி ஓடி விடும். எனவே இதெல்லாம் இந்தியாவுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு வரை சாத்தியமாகக் கூடியதா என்பதே சந்தேகமாக உள்ளது. ஜப்பானே கூட இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு விற்று காசு பார்க்கத்தான் முடிவெடுத்துள்ளதாம்.
அம்புட்டு தேவையா!
டோக்கியோ முதல் நகோயா வரையிலான பகுதியில் இந்த ரயிலை இயக்கத் தேவையான கட்டமைப்புக்கு 100 பில்லியன் டாலர் தேவைப்படுமாம்.
இந்த மார்க்கத்தில் அமையும் பாதையில் 80 சதவீதம் சுரங்கத்திற்குள் அமையவுள்ளது.
40 நிமிடத்தில்
தற்போதைய ஜப்பான் புல்லட் ரயில்கள் மூலம் டோக்கியோ, நகோயா இடையிலான பயண நேரம் 88 நிமிடமாக உள்ளது. மெக்லேவ் வந்தால் அது 40 நிமிடமாக குறைந்து விடும்.
சிறுத்தை சிறிசுப்பா...
இப்போதைக்கு உலகிலேயே அதி வேகமான ஓட்டத்துடன் கூடிய விஷயம் மெக்லேவ்தான். சிறுத்தை கூட மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில்தான் ஓடும். இதுதான் உலகிலேயே அதி வேகமாக ஓடக் கூடிய விலங்காகும். மெக்லேவை வைத்து பூமியை சுற்றி வருவதாக இருந்தால் 67 மணி நேரத்தில் அதைச் செய்து விடலாம் (முருகப் பெருமான் கவனத்திற்கு!)
ம்ஹூம்.. வேடிக்கை பார்ப்போம்.. வேறென்ன செய்ய!