அட்லாண்டிக் கடலுக்கு மேலே.. ஓடும் விமானத்தில் பிறந்த "அழகிய தேவதை"!
நியூயார்க்: அட்லாண்டிக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த விமானத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பெண் விமானத்திலேயே அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
கடந்த செவ்வாய் அன்று ஜோர்டான் தலைநகர் அம்மான் நகரிலிருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த ராயல் ஜோர்டான் விமானத்தில் 7 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவரும் பயணம் செய்து கொண்டிருந்தார். அட்லாண்டிக் கடலுக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது, கர்ப்பிணிப் பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனடியாக விமான பணிப்பெண்ணை அழைத்து தனக்கு வலி ஏற்பட்டதை அப்பெண் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து விமானத்தின் மருத்துவக்குழு ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மயக்க மருந்து நிபுணர் மற்றும் சில பயணிகளின் உதவியுடன் விரைவாகவும் எளிமையாகவும் விமானத்தில் வைத்தே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.
நியூயார்க் நேரப்படி செவ்வாய் அன்று காலை 5.30 மணிக்கு 2.7 கி எடையுடன் அழகிய பெண் குழந்தையை அப்பெண் பெற்றெடுத்தார்.
பிரசவத்தில் எதுவும் சிக்கல் இல்லாததால் விமானத்தை அவசரமாக தரையிறக்கும் முடிவு கைவிடப்பட்டது. பிரசவம் முடிந்த நான்கு மணி நேரம் கழித்து விமானம் நியூயார்க் விமான நிலையத்தை வந்தடைந்தது.
பின்னர், அப்பெண் தனது குழந்தையுடன் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டார். அங்கு தாயையும், சேயையும் பரிசோதித்த மருத்துவர்கள், குறை பிரசவத்தில் பிறந்த போதும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.