தீவிரவாதிகளை வீழ்த்திவிட்டோம்: கென்ய அதிபர் அறிவிப்பு
நைரோபி: ‘வெஸ்ட் கேட் மால் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை வீழ்த்திவிட்டோம் என்று அதிபர் அறிவித்துள்ளார்.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ‘வெஸ்ட் கேட் மால்‘ எனும் வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மதியம் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணுவத்தினர் பதில் தாகுதலில் ஈடுபட்டனர். இதில் இந்தியர்கள் உள்பட 67 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் கென்யா அதிபர் உஹுரு கென்யட்டா நாட்டு மக்களுக்கு நேற்று தொலைக்காட்சியில் உரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ சோமாலியாவின் அல் ஷபாப் தீவிரவாதிகளை நமது படையினர் வீழ்த்தி விட்டனர். அவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் பிடிபட்டுள்ளனர். நம் மீது தாக்குதல் தொடுத்தவர்களை வெட்கப்பட வைத்து விட்டோம். வீழ்த்தி காட்டியுள்ளோம். தீய சக்திகளை கென்யா வீழ்த்தி, வெற்றி காணத்தொடங்கி உள்ளது'' என கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், இந்த தாக்குதலில் ஒரு இங்கிலாந்து பெண், 2 அல்லது 3 அமெரிக்கர்களுக்கு தொடர்பு உண்டு என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை என கூறினார்.