குர்து இன பத்திரிக்கையாளரை சுட்டுக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: குர்து இன பத்திரிகையாளர் முஹனத் அகிடியை, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த செயலுக்கு உலக அளவில் கடும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
அக்டோபர் 13ம் தேதி அகிடியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவரது படுகொலையை குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியும் உறுதிசெய்துள்ளது. கஸ்லானி ராணுவ தளத்தில் வைத்து அகிடி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 37 வயதான அவரை ஒரு புல்லட் மூலம் சுட்டுக் கொன்றுள்ளனர் தீவிரவாதிகள்.
மோசூல் நகரில் வைத்து அகிடியை 2 மாதங்களுக்கு முன்பு தீவிரவாதிகள் சிறை பிடித்தனர். உள்ளூர் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வந்தார் அகிடி. மேலும் ஒரு தொலைக்காட்சி ஷோவிலும் பங்கேற்று வந்தார்.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்புதான் திக்ரித் நகரில் பொது மக்கள் முன்பாக ஈராக்கைச் சேர்ந்த கேமராமேன் ராத் அல் அஸ்ஸாவி என்பவரை தூக்கிலிட்டுக் கொன்றனர் தீவிரவாதிகள் என்பது நினைவிருக்கலாம்.
அகிடியுடன் அவரது சகோதரர் மற்றும் மேலும் இருவரையும் சேர்த்துக் கொன்றுள்ளனர் தீவிரவாதிகள். அனைவரும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்க மறுத்ததால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனராம்.
அகிடி மற்றும் அஸ்ஸாவி படுகொலைக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.