கடந்த ஆண்டு 158.. இந்த ஆண்டு இதுவரை 134… சவுதியில் அதிரடி மரண தண்டனை
ரியாத்: யார் குற்றம் செய்தாலும் அதற்கேற்ற தண்டனை நிச்சயம் உண்டு என்று சொல்கிறது சவுதி அரேபியாவின் சட்டம். இளவரசர் என்றாலும் அதற்கு விதிவிலக்கல்ல என்று நேற்று இளவரசர் கபிர் செய்த கொலைக்காக மரண தண்டனை பெற்றார். இப்படி வழங்கப்பட்ட மரணத் தண்டனைகள் மட்டும் கடந்த ஆண்டு 158. இந்த ஆண்டு இதுவரை 134 மரணதண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் இளவரசர் டர்கி பின் சவுத் அல் கபிர், தனது நண்பர் மகிமித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது எழுந்த மோதலில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சவுதி நீதிமன்றம் அவருக்கு மரணதண்டனையை வழங்கியது. 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின்படி நேற்று அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, சவுதி அரேபியாவில் நீதி நிர்வாகம் சரியாக செயல்படுவதாக கொலையுண்ட மகிமித்தின் உறவினர் கூறியுள்ளார். அதே போன்று குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டனை உண்டு என்று மரணதண்டனை நிறைவேற்றம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவை பொருத்தவரை, கொலை, போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல், பாலியல் பலாத்காரம், மதநிந்தனை போன்றவை இஸ்லாமிய சட்டப்படி கடுமையான குற்றங்கள். இதனை செய்பவர்களுக்கு மரணம் நிச்சயம்.
அதன்படி, 2015 ஆம் ஆண்டில் மட்டும் 158 மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்று மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் அளிக்கப்படும் மரண தண்டனையில் பெரும்பாலும் கொலை மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான குற்றங்களே அதிகம். ஆனாலும் கடந்த ஆண்டு தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஒரே நாளில் 47 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு இதுவரை 134 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் கடைசி மரணதண்டனை இளவரசர் கபிருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. அது வரைக்கும் எத்தனை மரணதண்டனை கொடுக்கப்பட்டு 134 என்ற எண் உயரப்போகிறது என்பது தெரியவில்லை.