மலேசியாவின் 'லிட்டில் இந்தியா'வில் பிரமாண்ட 'தோரண வாயிலை' திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
கோலாலம்பூர்: பிரதமர் நரேந்திர மோடி நாளை முதல் 4 நாட்கள் மலேசியா, சிங்கப்பூர் பயணத்தை மேற்கொள்கிறார். மலேசியாவின் கோலாலம்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்ட தோரண வாயிலையும் பிரதமர் மோடி திங்கள்கிழமையன்று திறந்து வைக்க உள்ளார்.
மலேசியாவுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகிறார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், கோலாலம்பூர் புறநகரான லிட்டில் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்ட தோரண வாயிலை திறந்து வைக்கிறார்.
இந்த லிட்டில் இந்தியா பெயருக்கேற்ப குட்டி இந்தியாவாகத்தான் இந்தியர்கள்....குறிப்பாக தமிழர்கள் பெருமளவு வாழும் பகுதியாகும். இந்த தோரண வாயில் அமைக்கும் திட்டம் 2010ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. இத்தோரண வாயிலை மலேசியாவுக்கு இந்தியா அன்பளிப்பாக அளித்துள்ளது. இருநாட்டு நட்புறவின் அடையாளமாக இத்தோரண வாயில் அமையும்.
மாமன்னர் அசோகர் காலத்தில் பிரமாண்ட தோரண வாயில்கள் அமைக்கப்பட்டு அதில் புத்தம் மதம் சார்ந்த அடையாளங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்தியாவின் சாஞ்சியில் இன்றளவும் வரலாற்று சாட்சியங்களாக இவை இருக்கின்றன.
இதே சாயலில் லிட்டில் இந்தியா தோரண வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் போதி மரம், சாஞ்சி அசோக சக்கரம் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தோரண வாயிலானது புத்த மதம்- இஸ்லாமிய மதம் இரண்டின் கலைவடிவங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
இந்திய மதிப்பில் ரூ7.8 கோடியில் இந்த தோரண வாயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வரும் 23-ந் தேதி திங்கள்கிழமையன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.