108 பயணிகளுடன் நூலிழையில் பயங்கர விபத்திலிருந்து தப்பிய லுஃப்தான்சா விமானம்
வார்சா : போலந்து நாட்டின் வார்சா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் நூலிழையில் பெரும் விபத்திலிருந்து தப்பியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த லுஃப்தான்சா எம்ப்ரேர் இ.ஆர்.ஜே. -195 என்ற விமானம் 108 பயணிகளுடன் முனீச் நகரிலிருந்து போலந்து நாட்டின் வார்சா நகருக்கு வந்தது.
அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் தரையிறங்குவதற்காக வானிலிருந்து உயரத்தைக் குறைத்து இறங்கி வந்து கொண்டிருந்தது.
அப்போது, திடீரென ஆளில்லா விமானம் ஒன்று அந்த விமானத்திற்கு எதிரே, வெறும் 100 மீட்டர் தொலைவில் 760 மீட்டர் உயரத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது.
இதனால் இரண்டு விமானங்களும் மோதும் நிலை ஏற்பட்டது. ஆனால் லுஃப்தான்சா விமானத்தின் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு பெரும் விபத்தை தவிர்த்தார்.
பின்னர் இது பற்றி விமானிகள் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் மீறி அந்த ஆளில்லா விமானம் பறந்து வந்தது எப்படி என்று அதிகாரிகள் குழம்பிப் போயுள்ளனர். தற்போது அந்த ஆளில்லா விமானம் அத்துமீறி பறந்தது பற்றி விசாரனை நடைபெற்று வருகிறது.
விமானத்தின் அளவைப் பொருத்தவரை 50 மீட்டர் உயரத்திற்கு மேல் ஆளில்லா விமானம் பறக்க விடக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாட்டுகள் போலந்து நாட்டில் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.