ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை
டோக்கியோ: ஜப்பானில் அணு உலை அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்காக உள்ள நமி பகுதியில் பூமியின் சுமார் 13 கிலோ மீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.22 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து, கடலில் ஒரு மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழலாம் என்பதால் புகுஷிமா அணு உலை அமைந்திருக்கும் கடலோரப் பகுதியில் உள்ள இவாட்டே, மியாகி ஆகிய நகரங்களுக்கு ‘சுனாமி' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவாட்டே நகர மக்களை உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பேரிடர் மேலாண்மை குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த அணு உலையை நிர்வகித்து வரும் டோக்கியோ மின் உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இதே பகுதியில் அடுத்தடுத்து உருவான நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு 18 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலி ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.