மலேசியாவில் நடுவானில் தீப்பிடித்த விமானம்: அவசரமாக தரையிறக்கிய விமானி
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்நாட்டு விமானம் ஒன்று திடீர் என்று தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கடந்த 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய விமானம் இந்திய பெருங்கடலுக்குள் விழுந்து மூழ்கிவிட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசியாவில் மேலும் ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாம்பூர் அருகே உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து டெரங்கனு மாநிலத்திற்கு பயணிகளுடன் விமானம் ஒன்று இன்று கிளம்பிச் சென்றது. செல்லும் வழியில் விமானத்தின் என்ஜின்களில் ஒன்றில் தீப்பிடித்தது. இதையடுத்து விமானி உடனே விமானத்தை திருப்பிக் கொண்டு வந்து தரையிறக்கிவிட்டார்.
விபத்துக்குள்ளான விமானம் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட மலின்டோ என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முன்னதாக கடந்த வாரம் மலேசியாவில் இருந்து நேபாள் சென்ற விமானம் விமான நிலையத்தில் வாத்துக் கூட்டம் மீது மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.