குலுங்கிய இந்தோனேசியா! சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால்.. 46 பேர் பலி, 700க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பாலி: இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.
ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். அதேபோல அப்பகுதியில் எரிமலை வெடிப்புகளும் கூட அடிக்கடி ஏற்படும்.
மெக்சிகோ நிலநடுக்க மீட்புப் பணியில் ராக் ஸ்டாரான 'ஃப்ரைடா' மோப்ப நாய்! தெறிக்கிறது லைக்ஸ்
இந்தோனேசியா
இதற்கிடையே இந்தோனேசியாவில் தற்போது மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 46 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவா தான் இந்த நிலநடுக்கத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
நிலநடுக்கம்
பெங்குலு என்ற பகுதியில் இருந்து தென்மேற்கே 202 கிலோமீட்டர் தொலைவில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகி உள்ளது. மேற்கு ஜாவாவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள தலைநகர் ஜகார்த்தாவிலும் இது உணரப்பட்டது. இருப்பினும், ஜகார்த்தாவில் உயிரிழப்போ காயமோ எதுவும் பதிவாகவில்லை
700 பேர் காயம்
அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் என்பதால் இந்தோனேசியாவில் கட்டப்படும் கட்டிடங்கள் சிறு நில அதிர்வுகளை தாங்கும் வகையில் தான் கட்டப்பட்டு இருக்கும். இருப்பினும், இவ்வளவு வலுவாக நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதைத் தாங்க முடியாமல் சில கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலருக்கும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டு உள்ளன. அவர்கள் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நிலநடுக்கத்தால் பயந்து பலரும் சாலைகளில் முகாமிட்டு உள்ளனர். சுமார் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மோசமான பாதிப்பு
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், " மருத்துவமனையில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல 300 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி எலும்பு முறிவுகளால் காயமடைந்தவர்கள். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தோரை மீட்டு அவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
அச்சம்
மீட்பு பணிகள் இப்போது தான் தொடங்கப்பட்டு உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஒரே ஒரு மருத்துவமனையில் ஏற்பட்டவை. மற்றவை அருகே இருக்கும் கிராமங்களில் ஏற்பட்டவையாகும். இவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள போதிலும் நல்வாய்ப்பாகச் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
மீட்பு பணிகள்
அங்குள்ள கடைகள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் நிலநடுக்கத்தால் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் சியாஞ்சூரில் பல கட்டிடங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது தெளிவாகத் தெரிகிறது. மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், மருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ்கள் சென்ற வண்ணம் இருக்கிறது.
வார்னிங்
பொதுவாக நிலநடுக்கத்தைக் காட்டிலும் ஆஃப்டர் ஷாக் (aftershocks) எனப்படும் நிலநடுக்கத்திற்குப் பின் ஏற்படும் நில அதிர்வுகளால் தான் பாதிப்புகள் அதிகம் இருக்கும். அடுத்த சில மணி நேரத்திற்கு இந்தோனேசியாவிலும் இந்த ஆஃப்டர் ஷாக் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இருப்பினும், பெரும்பாலான இடங்களில் இன்னும் மீட்புப் பணிகள் தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது.