செவ்வாயில் நம்ம ஆர்க்டிக் சைஸுக்கு ஒரு கடல் இருந்ததாம்..!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய கடல் இருந்தது என்ற முடிவுக்கு நாசா விஞ்ஞானிகள் வந்துள்ளனர். கிட்டத்தட்ட 6 ஆண்டு ஆய்வுக்குப் பின்னர் இந்த முடிவுக்கு நாசா வந்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.
இந்த கடலானது ஆர்க்டிக் கடல் அளவுக்கு பெரிதாக இருந்ததாம். முன்பு இதை விட சிறிய அளவில் செவ்வாயின் கடல் இருந்திருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை விட பெரிய அளவில் இந்தக் கடல் இருந்திருக்கலாம் என்று இப்போது நாசா நம்புகிறது.

செவ்வாய் கிரகத்தின் வடக்கு பகுதியின் அடித்தளத்தில் இந்தக் கடலானது பல பலட்சம் ஆண்டுகளுக்கு இருந்ததாகவும் நாசா விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
இந்த கண்டுபிடிப்பானது உண்மையாக இருக்கும்பட்சத்தில், பூமியைப் போலவே செவ்வாயிலும் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் இருந்திருக்கலாம் என்பதும் உண்மையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பும் கூட செவ்வாயின் வட பகுதியில் கடல் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் உரிய ஆதாரம் எதுவும் கிடைக்காமல் இருந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள புதிய புள்ளிவிவரத் தகவல்கள் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளதால் கடல் இருந்தது என்று முதல் முறையாக நாசா கூறியுள்ளது என்று நாசாவைச் சேர்ந்த மிக்கேல் மும்மா கூறியுள்ளார்.
அதேசமயம், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று நாசாவின் சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஜெட் புரபல்சன் ஆய்வகத்தின் திட்ட விஞ்ஞானியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் வசவடா கூறுகையில், இது இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஊகமாகத்தான் உள்ளது என்றார்.
இருப்பினும் செவ்வாயில் தண்ணீர் இருந்தது உண்மைதான் என்று நாசா திடமாக நம்புகிறது. தண்ணீரின் இரு விதமான வடிவத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒன்று H2Oவுக்கு இணையாக உள்ள வடிவமாகும். அடுத்து கன நீராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது கடல் நீர். செவ்வாய் கிரகத்தின் விண்கல்லில் இதன் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செவ்வாயின் வட பகுதியில் மட்டுமே கடல் இருந்துள்ளது. தென் பகுதியில் இல்லை. மேலும் வடபகுதி கடலானது கிரகத்தின் தரைப் பரப்பில் 19 சதவீத அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. அதேசமயம், ஆர்க்டிக் கடலானது பூமியின் பரப்பளவில் 17 சதவீதத்திற்கு விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications