இத்தாலி பிரதமராகிறார் 39 வயது ரென்சி.. இவர்தான் இத்தாலியின் முதல் இளம் வயதுப் பிரதமர்
இத்தாலியில், கடந்த ஆண்டு, நடைபெற்ற தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை. இதையடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஹென்ரிகோ லெட்டா, பிரதமராக பதவி ஏற்றார்.
இத்தாலியில் தற்போது, கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதை சமாளிக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, என, பிரதமர், லெட்டா அரசு மீது, கடும் விமர்சனம் எழுந்தது.அதனைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இடதுசாரி கட்சியைச் சேர்ந்த மேட்டியோ ரென்சி, ""தற்போதைய அரசு பதவியேற்று 10 மாதங்களாகியும் தேர்தலில் அளித்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளவில்லை'' எனக் குற்றம் சாட்டினார். இந்த நிலையில்தான் ரென்சியே தற்போது பிரதமராகிறார்.
விரைவில் புதிய அரசை அமைப்பதற்கான உரிமையை அதிபர் ஜார்ஜியா நபோலிடானோவிடம், ரென்சி கோருவார் என்றும், அதன் பின்னர் இத்தாலியில் சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, கூட்டணியில் அங்கம் வகிக்கும் நடுநிலை வாதிகள் மற்றும் புதிய நடுநிலை வலதுசாரிகளின் தலைவர் ஏஞ்சலினோ அல்போன்சா, ""புதிய பிரதமருக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம்'' என தெரிவித்துள்ளதால், அந்தக் கட்சியின் வாக்குகள் ரென்சிக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இத்தாலி நாடாளுமன்றத்தில் ரென்சி தன் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. ஆனால், ரென்சி பிரதமராக வர அந்நாட்டு முதலீட்டாளர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.