சவுதியில் பரவும் உயிர் கொல்லி வைரஸ்: இதுவரை 102 பேர் சாவு- தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதன்முறையாக சவுதி அரேபியாவில் ஒரு வைரஸ் நோய் பரவியது. இதற்கு எம்இஆர்எஸ் வைரஸ் என்று பெயரிடப்பட்டது.
மூச்சுத்திணறலை ஏற்படுத்தி ஆளை கொல்லும் பயங்கர வியாதி இது. இந்நோய் தற்போது சவுதி அரேபியாவில் மீண்டும் பரவியுள்ளது.
இந்தாண்டு இதுவரை 102 பேர் இந்த வைரஸ் நோய்க்கு பலியாகியுள்ளனர். இதில், நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி ஜெட்டா, தபுக் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களில்10 பேருக்கு இந்த வைரஸ் பாதி்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் சேர்த்து மொத்தம் 339 பேர் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சவுதி அரேபியாவின் ஜெட்டா, ரியாத் மற்றும் தாம்மம் ஆகிய நகரங்களில் சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாம்களை திறந்து மக்களுக்கு பரிசோதனைகள் நடத்தி வருகிறது.
சவுதியிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றரிக்கையில், மாணவ, மாணவிகளுக்கு நோய் பரவாமல் தற்காப்பு நடவடிக்கைக்கு மேற்கொள்ள செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் செயல்பட்டு வரும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளை சேர்ந்த அமைப்புகள், தங்கள் நாட்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றன.