சுடப்பட்ட மலேசிய விமானம் அருகே பறந்த உக்ரைனின் போர் விமானம்: ரஷ்யா வெளியிடும் புது தகவல்!
மாஸ்கோ: 298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் பறந்து கொண்டிருந்த போதே அதன் அருகே உக்ரைனின் போர் விமானமும் பறந்து கொண்டிருந்தது என்று ரஷ்யா புது தகவலை வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்தில் இருந்து 298 பயணிகளுடன் மலேசியா சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் பக் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்படியே நடுவானில் அந்த விமானம் வெடித்து சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சிதறி விழுந்தது.
இந்த தாக்குதலுக்கு முதலில் யார் காரணம் என்ற குழப்பம் நீடித்தது. பின்னர் கிழக்கு உக்ரைனில் இயங்கும் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களே காரணம் என்பது உறுதியானது. அத்துடன் ரஷ்யாவின் ஒத்துழைப்பும் கிளர்ச்சியாளர்களுக்கு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இதை மறுத்துள்ளது ரஷ்யா. இது குறித்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் ரஷ்யா ராணுவ தாளபதி இகோர் முகுசேவ் கூறியதாவது:
உக்ரைன் போர் விமானம்
மலேசிய பயணிகள் விமானம் பறந்து கொண்டிருந்த அந்த வான்பரப்பில் 3 அல்லது 4 கிலோ மீட்டர் சுற்றளவில்தான் உக்ரைனின் எஸ் யூ-25 போர் விமானமும் பறந்து கொண்டிருந்தது.
ஆயுதம் வழங்கவில்லை..
உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆயுதம் வழங்கவில்லை. அதேபோல் 11 பக் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை இயக்குவதற்கான பயிற்சியையும் போராளுக்கு ரஷ்யா வழங்கவில்லை.
ஆதாரம் இருக்கிறதா?
அமெரிக்கா தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறுகிறது. அப்படி ஆதாரம் இருந்தால் உரிய செயற்கைக் கோள் படங்களுடன் ஆதாரங்களை வெளியிட வேண்டும்.
உக்ரைன் தான் பக் ஏவுகணைகளை நிறுத்தியது
உண்மையில் சம்பவ நாளில் உக்ரைன்தான் பக்-எம்1 ஏவுகணைகளை டொனெஸ்ட்ஸ்க் நகரில் நிறுத்தியது. இவ்வாறு ரஷ்யா ராணுவ தளபதி கூறினார்.
உக்ரைன் மறுப்பு
ஆனால் உக்ரைன் அதிபர் பீட்ரோ போரொஷென்கோ, ரஷ்யா சொல்வதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மலேசிய விமானம் பறந்த போது உக்ரைனின் போர் விமானம் எதுவும் பறக்கவில்லை என்கிறார்.
எந்த விமானமும் பறக்கலையே..
உக்ரைனின் எந்த ஒரு விமானம் அந்த நேரத்தில் வானில் பறக்கவே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தும் ஆதரவு.
இங்கிலாந்து பிரதமர் கேமரூம் கூட, உக்ரைனிடம் அப்படியான ஏவுகணைகள் எதுவும் இல்லை என்று ஆதரவு தெரிவித்திருக்கிறார்.