ஒரே ஆண்டில் மலேசியா சம்பந்தப்பட்ட 3 வது விமான விபத்து!
ஜகார்த்தா: ஒரே ஆண்டில், மலேசியா தொடர்புடைய 3வது விபத்தாக இன்றைய இந்தோனேசிய விமான மாயம் அமைந்துள்ளது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவிலிருந்து இன்று காலை சிங்கப்பூர் கிளம்பிய ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் மாயமாகி விட்டது. பல மணி நேரமாகியும் விமானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. அது கடலில் விழுந்திருக்கலாம் என்று தற்போது நம்பப்படுகிறது.
இந்த ஆண்டில் மலேசியா தொடர்புடைய 3வது பெரிய விமான விபத்தாக இது அமைந்துள்ளது.
க்யூ இசட் 501
ஏர் ஏசியா நிறுவனம் மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. தற்போது மாயமான விமானம் க்யூ இசட் 501 என்பதாகும். அதில் 162 பேர் இருந்தனர். ஜாவா கடலுக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது இது மாயமானது.
மலேசியாவைச் சேர்ந்த டோனி பெர்னாண்டஸ் என்பவர்தான் ஏர் ஏசியாவின் தலைவர் ஆவார். இப்பிராந்தியத்தில் மலிவு கட்டண விமான சேவையை ஏர் ஏசியா நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏர் ஏசியா இந்தோனேசியா நிறுவனத்திற்கு 49 சதவீத பங்குகள் உள்ளன.
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஏர் ஏசியா பிரபலானது. இந்தியா்விலும் இது சமீபத்தில் சேவையைத் தொடங்கியது. இதுவரை எந்த விபத்திலும் சிக்காத நிறுவன்மாக ஏர் ஏசியா இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
எம்.எச் 370
இதற்கு முன்பு இந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய ஏர்லைன்ஸின் எம்எச் 370 விமானம் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்குக்கு 239 பேருடன் சென்று கொண்டிரு்நதபோது காணாமல் போய் விட்டது. இதுவரை அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியவே இல்லை. அது இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் இதுவரை விமான பாகம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
பல நாடுகள் சேர்ந்து இந்தியப் பெருங்கடலில் தீவிர வேட்டை நடத்தியதை உலகமே சோகத்துடன் பார்த்தது. இடையில் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் இதுவரை விமானம் குறித்த ஒரு தகவலும் இதுவரை இல்லை.
எம்எச் 17
கடந்த ஜூலை 17ம் தேதி மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த எம்எச் 17 விமானம் உக்ரைன் மீது பறந்து கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் வந்து கொண்டிரு்நதது. அதில் பயணித்த 298 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விமானத்தை ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் சுட்டு வீழ்த்தியதாக ஒரு தகவலும், ரஷ்யப் படையினர்தான் சுட்டு வீழ்த்தியதாக இன்னொரு தகவலும் இருந்தது. புரட்சிப் படையினர் வசம் உள்ள பகுதிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோதுதான் இந்த விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானது.
ஒரே வருடத்தில் மலேசியா தொடர்புடைய 3வது விமான விபத்தாக இன்றைய மாயமான விமானம் சேர்ந்திருப்பது மலேசிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.