ஒரு "கல்லு" மோதி பூமி அழியுமா.. சான்ஸே இல்லை.. நாசா தரும் ஆறுதல் விளக்கம்
நியூயார்க்: விண்கல் மோதி பூமி அழியப் போகிறது என்று பரவி வரும் செய்தியைக் கேட்டு யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், பூமி மீது விண்கல் மோதுவதற்கான வாய்ப்பு 0.01 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 15 மற்றும் 28ம் தேதிக்குள் மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியின் மீது மோத இருப்பதாக செய்திகள் பரபரக்கின்றன.
பூமிக்கு ஆபத்தாமே
இதனால் பூமிக்கு பெரும் சேதம் ஏற்படும் என்றும் கடந்த சில நாட்களாக செய்திகள் பீதி கிளப்பி வருகின்றன. இதனால் மக்களும் பீதியுடன் காணப்படுகின்றனர்.
அமெரிக்காவில் பாதி போயிருமாமே
குறிப்பாக விண்கல் மோதுவதால், அமெரிக்காவின் கடற்கரை பகுதிகள், மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் பெரும் அழிவை ஏற்படும் என்றும் அந்தச் செய்திகளில் கூறப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. உலகம் அழியப் போகிறது என்ற பேச்சும் எழுந்துள்ளது.
விண்கல் தாக்காது...
இந்நிலையில், இந்த செய்திகளுக்கு நாசா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தொடர்பாக நாசா மேலாளர் பால் சடோஸ் கூறும்போது, "பூமியை நோக்கி விண்கல் விழும் என்பதான கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த தேதிகளைத் தாண்டியும் எந்த விண்கல்லும் பூமியை தாக்காது.
அடுத்த 100 ஆண்டுகளுக்கு...
நாங்கள் தொடர்ந்து அதனை ஆராய்ந்து வருகிறோம். அடுத்த நூறு ஆண்டுகளுக்கு இதுபோல எந்த பாதிப்பும் பூமிக்கு இருக்காது என்பது உறுதி.
பாதிப்பு குறைவே...
அத்தகைய தூரத்தில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்கள் எதுவும் பூமியை நோக்கி வரவில்லை. அவ்வாறு ஏதேனும் விழுந்தாலும் பாதிப்பு வெறும் 0.01 சதவீதமே வாய்ப்பு இருக்கும்" என்று அவர் தெளிவு படுத்தியுள்ளார்.
நிம்மதி...
நாசாவின் இந்த விளக்கத்தால் மக்களிடையே நிம்மதி ஏற்பட்டுள்ளது.