கலிபோர்னியாவில் நவராத்திரி: கொலு வைத்து கொண்டாட்டம் - மகிஷாசுரமர்த்தினி பாடி பக்தி பரவசம்
நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் பாரம்பரிய முறையில் கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடி உள்ளனர்.
கலிபோர்னியா: அயிகிரி நந்தினி நந்தித மேதினி... என அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மகிஷாசூரமர்த்தினி பாடல்கள் ஒலிக்க பாரம்பரிய முறைப்படி நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டது. கொலு படி அமைத்து விருந்தினர்களை வீட்டிற்கு அழைத்து வெற்றிலைப்பாக்கு தாம்பூலம் கொடுத்து உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.
நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய முப்பெரும் தேவியர்களை வணங்குவதற்காகவே இந்த பண்டிகையை கொண்டாடுகிறோம். மகிஷனை அழிக்க அன்னை மகிஷாசூரமர்த்தினியாக அவதரித்தார். அசுர வதத்திற்காக அன்னை ஒன்பது நாட்கள் கொலுவிருந்து போரிட்டு பத்தாம் நாளில் வெற்றி பெற்றார். மகிஷாசூர சம்ஹாரம் நிகழ்ந்த நாளை விஜயதசமியாக வெற்றித்திருநாளாகக் கொண்டாடுகிறோம்.
பெண்ணால்தான் தனக்கு மரணம் நேர வேண்டும் என்று பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷாசூரன் ஆணவத்தில் அனைவரையும் துன்புறுத்த தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டனர். மகாவிஷ்ணு தேவர்களுக்கு உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால், மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை.எதனால் மகிஷனை அழிக்க முடியவில்லை என்று குழப்பத்தில் ஆழ்ந்தார். பின் பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றதால் தான் மகிஷனை அழிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் சென்று முறையிட்டார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ரங்கநாச்சியார் கோவிலில் நவராத்திரி உற்சவம் - தாயார் திருவடி தரிசனம்
மகிஷனை அழித்த அன்னை
சிவன் தன் சக்தியால் 'சந்தியாதேவி" என்ற சக்தியை உருவாக்க, அந்த மகா சக்தி மகிஷாசுரனிடம் பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷாசுரன் மாண்டான். மகிஷாசுரனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் மகிஷாசுரமர்த்தினி என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.
பத்து நாட்கள் பண்டிகை
இந்தியாவில் பல மாநிலங்களில் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த 7ஆம் தேதி முதல் கொண்டாடப்படும் பண்டிகை இன்று 6ஆம் நாளாக பல கோவில்களில் கொலு வைத்து கொண்டாடுகின்றனர். வெளிநாடுகளில் வசிக்கும் இந்துக்களும் பாரம்பரிய முறைப்படி கொலு வைத்து கொண்டாடுகின்றனர்.
கலிபோர்னியாவில் கொலு
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் மாண்டேகாவில் வசிக்கும் ராஜி கோவிந்தராஜன் என்பவரின் வீட்டில் 7 படிகள் அமைத்து கொலு வைத்து நவராத்திரி பண்டிகையை கொண்டாடினர். கொரோனா தொற்று காரணமாக குழுவாக இணைந்து பாதுகாப்புடன் பண்டிகை கொண்டாடப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் 75 பேர் பங்கேற்றனர்.
விஷ்ணு சகஸ்ரநாமம்
அலங்கரிக்கப்பட்ட வீட்டில் கொலு படி நடுநாயகமாக இருக்க அதில் தெய்வ பொம்மைகள் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தது. பலரும் ஆர்வத்துடன் கொலு பொம்மைகளைப் பார்வையிட்டனர். மகிஷாசுரமர்தினி, விஷ்ணு சகஸ்ரநாமம் பாடப்பட்டது. கொலுவில் பங்கேற்ற பலரும் பக்தியுடன் இதனை கேட்டு ரசித்தனர்.
வெற்றிலைப்பாக்கு பரிசு
வீணை பாராயணம், குரல் இசை, ஜுகல்பந்தியும் பக்தியுடன் நடைபெற்றது. நவராத்திரி கொண்டாட்டத்தில் பிரசாதம் இல்லாமல் எப்படி அனைவருக்கும் வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. நவராத்திரி பண்டிகையில் பங்கேற்று கொலு பார்க்க வந்தவர்களுக்கு வெற்றிலைப்பாக்கு தாம்பூலம், பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்தியாவில் கொண்டாடும் பண்டிகை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டதை மகிழ்ச்சியுடன் நமது ஒன் இந்தியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் ராஜி கோவிந்தராஜன்.