பதன்கோட் தாக்குதல்: நவாஸ் ஷெரீப் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் !
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் இன்று இஸ்லமாபாத்தில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பதன்கோட் விமானப் படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத் தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்டை நாடுகளுடனான தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், அந்நாட்டு நிதி அமைச்சர் நிஷார் அலி கான், உள்துறை அமைச்சர் ஆஜிஸ், லெப்டினட் ஜெனரல் நாசர் கான் ஜனுஜா, வெளியுறவுத்துறை செயலர் அப்தாப் சுல்தான் மற்றும் உளவுத்துறை முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், பதன்கோட் தாக்குதல் குறித்தும், இந்தியா தரப்பில் இருந்து இதுவரை பகிர்ந்து கொண்டுள்ள ஆதாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்தியா வழங்கியுள்ள ஆவணங்களின் படி வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரதமர் நரேந்திர மோடியிடம் வாக்குறுதி அளித்தபடி உடனடியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்கும் என்ற நம்பிக்கையில் இந்தியா காத்திருப்பதாக வெளிவுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications