சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது... மோடிக்கு பாக். பிரதமர் நவாஷ் ஷெரீப் கடிதம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுக்கும் விதமாக ‘இருதரப்பு பிராந்திய உறவுகள் குறித்து பரிமாறிக் கொண்ட கருத்துக்களால் சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக' மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடிதம் எழுதியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்த மோடி கடந்த மாதம் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
அந்த பதவியேற்பு விழாவுக்கு முதன்முறையாக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. அதன்படி, இலங்கை அதிபர், பாகிஸ்தான் அதிபர் உள்ளிட்ட தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக சார்க் நாட்டு தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார் மோடி. பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்புடனான சந்திப்பின் போது இரு நாட்டு உறவு குறித்து பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து மோடி, நவாஷ் ஷெரீப் தாயாருக்கு சால்வை ஒன்றை பரிசு வழங்கினார். அதை நவாசும் அவரது தாயாரிடம் வழங்கிய செய்திகள் பத்திரிக்கைகளில் வெளியானது. இதைதொடரந்து மோடியின் தாயாருக்கும் நவாஷ் ஷெரீப், பரிசு ஒன்றை கொடுத்து அனுப்பி இருந்தார்.
இதற்கிடையே, நவாப் ஷெரீப்பின் இந்தியப் பயணம் திருப்திகரமானதாக அமையவில்லை என பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆனால், பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுக்கும் விதமாக, மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார் நவாஸ் ஷெரீப். அதில், தனது இந்தியப் பயணம் திருப்திகரமானதாக அமைந்ததாக விளக்கமளித்துள்ளார் நவாஸ் ஷெரீப்.
பாகிஸ்தான் தூதரகம் மூலமாக பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கடிதத்தில், ‘இரு தரப்பு பிராந்திய உறவுகள் குறித்து நாமிருவரும் பரிமாறிக்கொண்ட கருத்துக்களால் மிகவும் திருப்தியடைந்து தான் தாய்நாடு திரும்பினேன்" என தெளிவுபட நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.