நிகரகுவாவில் நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்
நிகரகுவா: மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 800க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கி 33 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகரகுவா தலைநகர் மனாகுவாவில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 4:57 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகுகளாக நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
இதையடுத்து நிகரகுவா அதிபர் டேனியல் ஓர்டேகா அவசர நிலை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நிலநடுக்கத்தால் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியால் மனாகுவாவில் உள்ள கார்லோஸ் ராபர்ட்டோ மருத்துவமனையில் 37 வயது பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை இழந்துள்ளனர். பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்துக்கு பிறகு 400 முறை நில அதிர்வு உணரப்பட்டது என்று டேனியல் ஓர்டேகா கூறினார்.
இந்த நிலநடுக்கம் எல் சால்வடார், ஹோண்டூராஸ் ஆகிய நாடுகளிலும் கோஸ்டாரிகாவின் வடக்குப் பகுதியிலும் உணரப்பட்டது.
முன்னதாக நிகரகுவா நாட்டில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.