இந்திய டாக்டர்கள் தான் பீதி கிளப்புகின்றனர்... இதுவரை ‘எபோலா ’பாதிப்பில்லை என நைஜீரியா மறுப்பு
அபுஜா: தங்கள் நாட்டில் இதுவரை யாருக்கும் எபோலா பாதிப்பு இல்லை எனவும் இந்திய மருத்துவர்கள் தான் பீதியைக் கிளப்புவதாகவும் நைஜீரிய மருத்துவமனை ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கர உயிர்க்கொல்லி நோயாக உலகையே அச்சுறுத்தி வருகிறது எபோலா காய்ச்சல். இந்நோய்க்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆப்பிரிக்காவில் மட்டும் இந்நோய் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களைத் தாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நோய் தங்கள் நாட்டிற்குள்ளும் வந்துவிடா வண்ணம் மற்ற நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவில் பணி புரிந்து வரும் இந்திய மருத்துவர்கள், தங்களது மருத்துவமனை நிர்வாகம்தங்களின் பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்து வைத்துள்ளதாகவும் எங்களை வலுக்கட்டாயமாக எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வற்புறுத்துவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர்.இதற்கு அந்நாட்டு முதன்மை மருத்துவமனை ஒன்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. மேலும், நைஜீரியாவில் யாருக்கும் எபோலா பாதிப்பு இல்லை என்றும் இந்திய மருத்துவர்கள் தான் வீண் பீதியை கிளப்புவதாகவும் அம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அதேபோல், மருத்துவர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சில நடைமுறைகளுக்கு பிறகு இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் அவை இந்திய மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.