கொரோனா முடிவதற்குள்... மீண்டும் பரவ தொடங்கும் எபோலா... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஜெனீவா: உலகை அச்சுறுத்திய எபோலா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளதால், ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா, உலகெங்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தான் கொரோனா பரவலிலிருந்து உலக நாடுகள் மெல்ல மீண்டு வருகின்றன.

அதற்குள் தற்போது எபோலா வைரஸ் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான கினியாவில் ஞாயிற்றுக்கிழமை எபோலா பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
கினியா நாட்டில் தற்போது வரை 10 பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல ஐந்து பேர் எபோலா காரணமாக உயிரிழந்துள்ளனர். மேலும், காங்கோ நாட்டிலும் சிலருக்கு எபோலா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு - செனகல், கினியா, மாலி, ஐவரி கோஸ்ட், சியரா லியோன் மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எபோலா பரவல் மீண்டும் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்த நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிலுள்ள பல்வேறு நாடுகளிலும் திடீரென்று எபோலா வைரஸ் பரவ தொடங்கியது. சுமார் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எபோலா காரணமாகப் பாதிக்கப்பட்டனர். மேலும், 11,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கொரோனா வைரசை விட எபோலா அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியது. இருப்பினும், கொரோனாவைவிட எபோலா வைரஸ் மெதுவாகவே பரவும் என்பதால் எபோலா விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications