2022 அஜெண்டா "இதுதான்".. பேசுறது கிம் ஜாங் உன்னா?.. ஆச்சரியத்தில் வடகொரிய மக்கள்
பியாங்கியாங்: 2022ஆம் ஆண்டு உணவு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். எப்போதும் அணு ஆயுத சோதனை குறித்தே பேசி வந்த கிம், இந்த முறைதான் உணவு பஞ்சத்தை போக்க என்ன செய்யலாம் என்பதை தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பேய்மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயிர்கள் சேதமடைந்தன. விவசாயத் துறை போதுமான உற்பத்தியை நிறைவேற்றத் தவறியதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அண்டை நாட்டின் எல்லைகளை வடகொரியா மூடியுள்ளது. இதனால் உணவு கிடைக்காமல் மக்கள் கடந்த 3 மாதங்களாக தவித்து வந்தார்கள். உணவு பொருளுக்கு பெரும் தேவை அதிகரித்திருப்பதால் அதன் விலையும் அதிகரித்துள்ளது.
நடுங்குகிறது தலைநகர்.. வாட்டுகிறது குளிர்.. தவிக்கும் உத்தரபிரதேசம்.. 15 நாட்கள் பள்ளிகள் விடுமுறை
வடகொரிய அதிபர்
இந்த நிலையில் உணவு பஞ்சத்தால் மக்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவுறுத்தியுள்ளார். 2025 ஆம் ஆண்டு வரை உணவுப் பஞ்சம் இருக்கும் என அரசு தரப்பு கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான வர்த்தகமும் 2025 ஆம் ஆண்டு வரை தொடங்க வாய்ப்பில்லை.
குறைவாக சாப்பிடுங்கள்
இதனால் உணவு பஞ்சத்தை சமாளிக்க வடகொரியா திணறி வருகிறது. 2025 ஆம் ஆண்டு வரை குறைவாக சாப்பிட மக்களுக்கு அதிபர் கிம் ஜான் உன் அறிவுறுத்தியிருந்தார். இதை பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இதற்கு ஐநாவும் கண்டித்தது. 2021 ஆம் ஆண்டு மட்டும் வடகொரியாவில் 8 லட்சம் டன் உணவு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். இதே நிலை நீடித்தால் அங்குள்ள மக்கள் பலர் உயிரிழக்கக் கூடும் என எச்சரித்தது.
10 நாட்கள்
இந்த நிலையில் தந்தையின் 10ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக 10 நாட்களுக்கு நாட்டு மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, யாரும் பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது, மது அருந்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தார் கிம். இதுவும் பலரது கண்டனத்துக்குள்ளானது. இந்த நிலையில் அண்மையில் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்த கிம், உடல் எடை குறைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு
நாட்டு மக்களுக்காக தனது உணவு தேவையை அவர் குறைத்து கொண்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டையொட்டி அந்நாட்டு செய்தியாளர்களை கிம் ஜாங் உன் சந்தித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் வரும் ஆண்டில் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதிலும் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் கவனம் செலுத்துவோம்.
நோய் தடுப்பு நடவடிக்கை
இந்த கொரோனா தொற்று நமக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதை எதிர்கொள்ள நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எந்த வித தொய்வும் இன்றி ஏற்பாடுகள் செய்திருத்தல் வேண்டும். கொரியாவில் நிலையற்ற ராணுவ சூழல் மற்றும் சர்வதேச சூழலை சமாளிக்க நாட்டின் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும். பியாங்கியாங் தொடர்ந்து தனது ராணுவ திறன்களை கட்டமைக்கும் என அமெரிக்கா அல்லது தென் கொரியா ஆகிய நாடுகளை குறிப்பிடாமல் கிம் கூறியிருந்தார்.
விவகாரங்கள்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் அணு ஆயுத சோதனைகளை கைவிடாமல் இருந்தது வடகொரியா. கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்புடன் கிம் ஜாங் உன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததை அடுத்து அணு ஆயுத சோதனை குறித்த விவகாரங்களிலிருந்து பியாங்கியாங் ஒதுங்கியே இருந்தது குறிப்பிடத்தக்கது.