வயதானவர்கள் வாழத் தகுந்த நாடு... முதலிடத்தில் நார்வே, இந்தியாவிற்கு 69வது இடம்!
ஓஸ்லோ: முதியோர்கள் வாழத் தகுந்த நாடு எது என்பது குறித்து சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் நார்வே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவிற்கு 69வது இடம் கிடைத்துள்ளது.
குளோபல் ஏஜ்வாட்ச் என்ற அமைப்பு உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுப்படி, முதியோர்கள் வாழடச் சிறந்த இடம் என்ற பெருமையை நார்வே பெற்றுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி சர்வதேச முதியோர் கொண்டாடப்படுவதையொட்டி, இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
4 பிரிவுகளில்...
வருமான பாதுகாப்பு, சுகாதாரம், தனிப்பட்ட திறன் மற்றும் செயல்திறன் மிக்க சூழலிலான வாழ்க்கை என்ற நான்கு பிரிவுகளில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.
முதலிடத்தில் நார்வே...
இந்த ஆய்வின் படி, நார்வே முதலிடத்தையும் அதற்கு அடுத்த இடங்களை முறையே ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளும் பிடித்துள்ளன.
69வது இடம்...
இந்த பட்டியலில் இந்தியா 69வது இடத்தில் உள்ளது. நமது அண்டைநாடான இலங்கை 43வது இடத்திலும், சீனா 48வது இடத்திலும், பாகிஸ்தான் 91வது இடத்திலும் உள்ளது.
ஐ.நா. புள்ளி விவரம்...
வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதிலுமான 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனைத் தொடும் என்று ஐ.நா. புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
2050ம் ஆண்டிற்குள்....
அதன்படி, வரும் 2050-ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் 21 சதவிகிதத்தினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்றும், இந்த கணக்கீடு எடுக்கப்பட்டுள்ள 40 நாடுகளில் அவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான விசயம்...
உடல்நல மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றங்கள், மேம்படுத்தப்பட்டுள்ள சுகாதாரம், அதிகரித்துள்ள பொருளாதார செழிப்பு போன்றவையே இந்த நீட்டிக்கப்படும் வாழ்க்கை முறைக்குக் காரணங்களாக இருப்பது மகிழ்வை அளிக்கும் விஷயம் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
பிறப்பு விகிதம்...
ஆனால், பிறப்பு விகிதம் குறைந்து வருவதும் முதியவர்கள் அதிகமாகக் காணப்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.