ஒபாமாவை கெட்ட வார்த்தையில் சகட்டுமேனிக்கு திட்டிய பிலிப்பைன்ஸ் அதிபர்! #obama
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் ஒபாமாவை மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் சகட்டுமேனிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் திட்டிய சம்பவம் சர்வதேச நாடுகளை அதிர வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோவுடனான ஒபாமா சந்திப்பை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா அதிபர் லாவோஸுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதலாவது அதிபர் ஒபாமா.
1960களில் லாவோஸ் நாட்டின் மீது ரகசிய தாக்குதலை அமெரிக்கா நடத்தி வந்தது. அப்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளில் 30% வெடிக்கவில்லை. இவற்றின் தாக்கம் இன்னமும் இருந்து வருகிறதாம்.
லாவோஸில் சந்திப்புக்கு ஏற்பாடு
தற்போதைய பயணத்தின் போது இந்த வெடிகுண்டுகளை அகற்றும் திட்டத்தை ஒபாமா அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை இன்று லாவோஸில் ஒபாமா சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒபாமாவின் கேள்வி
இச்சந்திப்பின் போது பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் விவகாரத்தில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ரோடிரிகோ டுட்டர்டேவிடம் ஒபாமா கேள்வி எழுப்புவார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.
கொந்தளித்த பிலிப்பைன்ஸ் அதிபர்
இதனால் கடும் ஆத்திரமடைந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே கொதித்துப் போனார். இது தொடர்பாக அந்நாட்டு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஒபாமாவை கெட்ட வார்த்தைகளில் சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தார்.
சகட்டுமேனிக்கு வசை...
ஒபாமா என்ன பெரிய கொம்பனா? நான் ஒன்றும் அமெரிக்காவுக்கு தலையாட்டி பொம்மை இல்லை. நான் இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் அதிபர். என்நாட்டு மக்களை தவிர வேறு யாருக்கும் நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. பொட்டை (பெண்) நாயின் மகனே.., உன்னை (ஒபாமா) சபித்து விடுவேன் என்று பிலிப்பைன்ஸ் மொழியில் ஏகத்துக்கும் பேசினார்.
ரத்து
இந்த பேட்டி சர்வதேச நாடுகளை அதிர வைத்தது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோடிரிகோ டுட்டர்டேவை இன்று பிற்பகல் ஒபாமா சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.