அடுத்து நீங்கள்தான்.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர்களுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை
வாஷிங்டன்: ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்துவதை குறிப்பிட்டு, தங்களது அடுத்த குறி அந்த இயக்கத்தின் தலைவர்கள் தான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எச்சரித்தார்.
சிரியா, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை கைப்பற்றுவதற்காக, தொடர் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள பெண்டகனில், அமெரிக்க தற்காப்புப் படை தலைமையகத்திற்கு வெளியே பேசிய ஒபாமா, அமைப்புகளின் தலைமைத்துவத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரத்தின் மூலம் ஐஎஸ் அமைப்பின் முக்கியமான 8 தலைவர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி அவர்களின் பெயரை அறிவித்தார்.
கொல்லப்பட்டவர்களில் அந்த அமைப்பின் இரண்டாவது தலைவர், இணையம் வழியாக ஆள் சேர்ப்பதில் முன்னிலையில் இருப்பவர், லிபியா பிரிவு இயக்கத்தின் தலைவர், மரண தண்டனை வழங்கி அதைக் காணொளியாக வெளியிடும் ‘ஜிஹாடி ஜான்' என்ற புனைப்பெயரில் வலம் வந்தவர் ஆகிய முக்கிய தீவிரவாதிகள் அடங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். மீது இதுவரை இல்லாத அதிகப்படியான தாக்குதலை நடத்த உள்ளோம். வான்வழித் தாக்குதலில் அந்த இயக்கத்தின் முக்கிய புள்ளிகள் ஒருவரை அடுத்து ஒருவராக வீழ்ந்து வருகின்றனர். இனி மேலும் அவர்களின் தலைவர்கள் ஒளிந்துகொள்ள முடியாது.
எங்களது தற்போதைய தகவல் மிகவும் எளிமையானது. எங்களின் அடுத்த குறி நீங்கள் தான் (தீவிரவாத தலைவர்கள்) என்றார் ஒபாமா.